ஜல்லிக்கட்டு பாணியில் தன்னெழுச்சி போராட்டம்.. ஹாங்காங் நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்த மக்கள்
பீஜிங்: ஹாங்காங்கில், ஒப்படைப்பு சட்டத்திற்கு எதிராக, போராட்டக்காரர்கள் ஒன்று கூடி, நாடாளுமன்றத்தை, சூறையாடியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹாங்காங்கைச் சேர்ந்தவர்கள் பிற நாடுகளுக்குச் சென்று குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டால், அவர்களை அந்த நாடுகளிடம் ஒப்படைக்க வகை செய்யும் ஒப்படைப்பு சட்டம் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான மசோதா நாடாளுமன்றத்தில், அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த சட்டத்திருத்த மசோதாவுக்கு, பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. கடந்த ஏப்ரல் மாதம் முதலே, அங்கு மக்கள் சாலைக்கு வந்து கடும் போராட்டங்களை முன்னெடுக்க தொடங்கியுள்ளனர்.
வன்முறை வடிவம்
இதுவரை, அமைதி வழியில் நடைபெற்ற போராட்டத்தின் வடிவம், தற்போது முதல் முறையாக நேற்று, வன்முறைக்கு திசைமாறியுள்ளது. பிரிட்டனின் ஆட்சியின் கீழ் இருந்து, ஹாங்காங், சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டதன் 22ஆவது ஆண்டு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. 1997ம் ஆண்டு, சீனாவிடம் ஹாங்காங் இதேநாளில், ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில்தான், ஹாங்காங் நாடாளுமன்ற அவையின் வளாகத்தின் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு போராட்டக்காரர்கள் உள்ளே சென்றனர்.
உள்ளே நுழைந்தனர்
நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் சென்று, அரசுக்கு எதிரான வாசகங்களை சுவர்களில் எழுதிய போராட்டக்காரர்கள், வெளியே சூழ்ந்திருந்த போராட்டக்காரர்களை நோக்கி கைகளை அசைத்து, தங்களின் ஒற்றுமைக்கான வெற்றி என்பதை போல, கைகளை அசைத்து உற்சாகம் வெளிப்படுத்தினர்.
தடியடி எச்சரிக்கை
நாடாளுமன்ற அவையின் வளாகத்திற்குள் அத்துமீறி நுழையும் போராட்டக்காரர்கள் கைது செய்யப்படுவார்கள், தடியடி நடத்தப்படும் என்பது போன்ற எச்சரிக்கைகளை காவல்துறையினர் விடுத்தனர். இருப்பினும், கட்டிடத்தின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் உள்ளே நுழைந்தனர். மிளகாய் பொடி ஸ்ப்ரே தூவியும் எந்த பலனும் கிடைக்கவில்லை. எனவே காவல்துறையினர் இறுதியில் அமைதியாகினர்.
ஜல்லிக்கட்டு போல
தலைவர்களே இல்லாமல், மக்களாலேயே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதாவது நம்மூர் ஜல்லிக்கட்டு போராட்டம் போலவே அங்கு நடக்கிறது. சீனாதான் இந்த மக்களின் முதல் எதிரி. போராட்டக்காரர்கள், டெலிகிராம் மெசேஜ் ஆப் மூலமாக ஒருங்கிணைக்கப்படுகிறார்கள். ஒருவருக்கொருவர் முகம் தெரியாதவர்களால் போராட்டம் ஒருங்கிணைக்கப்படுகிறது.
ஆயிரக்கணக்கானோர்
ஒரு சில குழுக்களில் 70 ஆயிரம் பேர் வரை இருக்கிறார்கள். எங்கு, எப்போது போராட்டம் நடைபெறும் என்று அவ்வப்போது அதில் தகவல் வருகிறது. அரசாலும், காவல்துறையாலும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்த தகவல்களையும், அதில் பகிர்கின்றனர். வழக்கறிஞர்கள், முதலுதவி அளிப்பவர்கள் மற்றும் மருத்துவர்கள் போன்றோருக்கென பிரத்யேக குழுக்களும் டெலிகிராமில் செயல்பட்டு வருகிறது.