வன்முறை ஸ்பாட்டான ஹாங்காங்.. உக்கிரமாகும் போராட்டம்.. நாடாளுமன்றம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு
ஹாங்காங்: ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்டதிருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தின் கட்டடத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியதால் பதற்றம் நிலவியது.
ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி வழக்கு விசாரணையை சந்திக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது.
இதை எதிர்த்து மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து ஹாங்காங் நிர்வாகத் தலைவர் இந்த சட்ட திருத்த மசோதாவை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.
இந்தியாவுக்கு வாங்க.. சீன அதிபருக்கு மோடி அன்பு அழைப்பு.. மாமல்லபுரத்தில் மீட்டிங்.. 3 நாள் கேம்ப்?
தொடர் போராட்டம்
ஆனால் அதை ஏற்க மறுக்கும் போராட்டக்காரர்கள் அந்த சட்டதிருத்த மசோதாவை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், போராட்டக்காரர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என இரண்டு மாதங்களுக்கு மேலாக மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போலீஸார்
இந்த நிலையில் ஹாங்காங்குக்கு சர்வதேச ஓட்டுரிமை மறுக்கப்பட்டதன் 5ஆவது நினைவு தினத்தையொட்டி நேற்று முன் தினம் பேரணி நடைபெற்றது. தடையை மீறி இந்த பேரணி நடந்ததால் போலீஸார் போராட்டக்காரர்களை கலைக்க முற்பட்டனர்.
வன்முறை
இந்த நிலையில் போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. ஹாங்காங்கின் பல்வேறு நகரங்களிலும் போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் சம்பவங்கள் அரங்கேறின.
தடியடி
ஹாங்காங் நாடாளுமன்றம் அமைந்துள்ள பகுதியே கலவர பூமியாக மாறியது. போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற கட்டடத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியதால் பதற்றம் உருவானது. இதையடுத்து அவர்களை தடியடி நடத்தி கலைக்க நடந்த முயற்சி தோற்றது.
கைது
பின்னர் கண்ணீர் புகை குண்டுகளையும் ரப்பர் குண்டுகளை வீசினர். மேலும் போராட்டக்காரர்களை எச்சரிக்க போலீஸார் வானத்தை நோக்கி 2 முறை துப்பாக்கியால் சுட்டனர். எனினும் அவர்கள் கலையவில்லை. இரு தரப்பினருக்குமான மோதல் இரவு முழுவதும் நீடித்தது. நள்ளிரவில் போராட்டம் சற்று ஓய்ந்த பிறகு, 2 சுரங்க ரயில் நிலையத்துக்குள் நுழைந்த போலீஸார் போராட்டக்காரர்களை கைது செய்ததாக கூறப்படுகிறது.