'சிங்கிள் கப் டீ விலை ரூ,13,800.. சொக்கிப்போகும் சுற்றுலா பயணிகள்.. அப்படி என்ன ஸ்பெஷல்
லண்டன்: எலிசபெத் ராணி வசிக்கும் லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனை அருகே ஓட்டலில் ஒரு சிங்கிள் டீ யின் விலை 13 ஆயிரத்து 800 ரூபாய் என்று சொல்கிறார்கள். அப்படி என்ன அந்த டீயில் ஸ்பெசலாக இருக்கிறது என்பதை இப்போது பார்த்து விடுவோம்.
பிரிட்டன்வாசிகளுக்கு அதாங்க நம்மை ஆண்ட வெள்ளைக்காரங்களுக்கு டீ சாப்பிடுவது என்றால் கொள்ளை பிரியம் என்பது உலகம் அறிந்த விஷயம்.
டீ சாப்பிடுவதில் மயங்கிய அவர்கள் பசுமையாக கிடந்த இந்தியாவின் பல்வேறு மலைகளை அழித்து டீ எஸ்டேட்களை உருவாக்கினார்கள். இதேபோல் இலங்கையிலும் பல மலைகளை அழித்து டீ எஸ்டேட்களை உருவாக்கினார்கள். இதன் மூலம் பல லட்சம் ஏக்கர் காடுகள் டீ எஸ்டேட்களாக மாறிவிட்டன.
டீ சாப்பிட ஆர்வம்
வெள்ளைக்காரர்கள் தினசரி சர்வ சாதாரணமாக 5 முதல் 10 டீ கூட அங்கு அருந்துவதை வாடிக்கையாக கொண்டவர்கள். நம்மூரிலேயே இப்போது பலரும் டீக்கு அடிமையாகி தினமும் 10 டீ கூட பருகுபவர்கள் உள்ளனர்.
காஸ்ட்லியான டீ
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். ஒன்றுமில்லிங்.. பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் தான் ராணி எலிசபெத் இருக்கிறார். அவரது அரண்மனைக்கு பக்கத்தில் உள்ள ரூபென்ஸ் என்ற ஓட்டலில் தான் லண்டனிலேயே (ஏன் உலகத்துலயே கூட) காஸ்ட்லியான டீயை விற்பனை செய்வதாக சொல்கிறார்கள். அதாவது 200 டாலரில் விற்பனை செய்கிறார்கள். நம்ம ஊர் மதிப்பில் சிங்கிள் டீ 13 ஆயிரத்து 800 ரூபாய் என்கிறார்கள்.
டீ கப் மதிப்பு ரூ. 42 ஆயிரம்
அப்படி அந்த டீயில் என்ன தான் இருக்கிறது என்று பார்த்தால், அபூர்வமான வெள்ளை நிற குடுவையில் தருகிறார்கள். அந்த ஒரு வெள்ளை குடுவை.. அதாங்க டீ கப்பு 42 ஆயிரம் ரூபாய் மதிப்பு கொண்டதாம். இங்கு நம் பயன்படுத்தும் வழக்கமான டீ தூளை கொண்டு இந்த டீ போடப்படுவதில்லை.
பிரத்யேமாக தேயிலை
இலங்கையில் இருந்து இதற்கென்றே பிரத்யேகமாக கொண்டு வரப்படும் ‘கோல்டன் டிப்ஸ்' எனும் தேயிலையினை வெல்வெட் துணியில் காய வைத்த பின்னரே, டீ போடப்படுகிறது. இந்த சுவைக்கு அடிமையான லண்டன்வாசிகள் காசை பற்றி கவலைப்படாமல் வந்து அடிக்கடி டீ சாப்பிட்டு செல்கிறார்கள். உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி, சுற்றுலா பயணிகளும் அப்படி என்ன தான் டீயில் இருக்கிறது என்று எண்ணி பருக தொடங்கினர். இந்த டீ அவர்களையும் வெகுவாக கவர்ந்துவிட்டது. இதனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் லண்டன் வந்தால் ஜாலியாக இஙகு வந்து டீ சாப்பிட்டு செல்கிறார்கள். ஒருமுறை டீ சாப்பிட்டால் அடுத்து எப்போது சாப்பிடுவோம் என்ற ஆர்வத்தை இந்த டீ தூண்டுகிறதாம்.