ஹார்வி புயல் சீரமைப்புப் பணியில் ஹூஸ்டன் தமிழ் மக்கள்.. பியர்லேண்ட் மேயர் பாராட்டு!
ஹூஸ்டன்(யு.எஸ்): ஹார்வி புயலால் பெரும் சேதமடைந்த ஹூஸ்டன் மாநகர குடியிருப்பு பகுதிகளின் சீரமைப்புப் பணியில் திறம்பட பணியாற்றிய தமிழர்களை, பியர்லேண்ட் மேயர் டாம் ரீட் பாராட்டியுள்ளார்.
ஹூஸ்டன் மாநகரத்தை தாக்கிய ஹார்வி புயலால், நகரமே தண்ணீரில் தத்தளித்தது. ஒரு வருடம் முழுவதும் பெய்யும் மழையை மூன்றே நாளில் கொட்டித்தீர்த்து. 54 இன்ச் அளவுக்கு பெய்து, அமெரிக்காவின் அதிகப்படியான மழை என பதிவு செய்யப்பட்டது. கொட்டும் மழையில் முக்கிய குடியிருப்புகளிலிருந்து மக்கள் கட்டாயமாக வெளியேற்றப் பட்டனர். உதவிக்கு இராணுவம் வரவழைக்கப்பட்டது. படகுகள் மூலம் மக்கள் வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்டனர்.
சாலைகள் ஆறாக மாறியது. நிறுத்தி வைக்கபப்ட்ட கார்கள் மிதந்து சென்றது. முதலை பாம்பு போன்ற நீர்வாழ் உயிரினங்கள் வெள்ளத்தில் வீட்டுக்குள் நுழைந்தது. வீட்டுக்குள் இருந்த பொருட்கள் தண்ணீரில் மிதந்து வெளியேறியதுடன், வீடுகள் சேதமடைந்தது கெமிக்கல் தொழிற்சாலையில் வெள்ளம் புகுந்து விஷவாயு கசிந்து மக்களை அச்சுறுத்தியது.
மழை நின்று, வெள்ளம் வடிந்த பின்னர் சீரமைப்புப் பணிகள் தொடங்கியது. பல தன்னார்வ அமைப்புகள் வெவ்வேறு குடியிருப்பு பகுதிகளை சீரமைத்தார்கள். பெருமளவில் பாதிக்கப்பட்ட கம்போடிய காலனி மற்றும் பல குடியிருப்பு பகுதிகளில் ஹூஸ்டன் தமிழ் நண்பர்கள் குழு, எம்பசிஸ் கார்ப்பரேசன் மற்றும் பாரதி கலை மன்றம் சார்பில் தன்னார்வல்கள் களமிறங்கினார்கள்.
பெருமாள் அண்ணாமலை ஒருங்கிணைப்பில், இந்த குழுவினர் மீட்பு பணி மற்றும் உணவு உடை வழங்கியதுடன் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழர்கள் உட்பட இந்தியர்கள் வசிக்கும் பல இடங்களிலும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எம்பஸிஸ் கார்ப்பரேட் மூத்த தலைவர்கள் அமெரிக்காவின் பல பகுதிகளில் இருந்து நேரில் வருகை தந்து தன்னார்வர்களின் பணியை ஊக்கப்படுத்தியுள்ளனர்.
களத்தில் 40 பேர் கொண்ட இந்த குழுவினர் கம்போடிய காலனியில் 200 வீடுகளையும், இந்திய குடியிருப்பு பகுதிகளில் 128 வீடுகளையும் சுத்தம் செய்து, சீரமைத்துக் கொடுத்துள்ளனர். வெள்ள பகுதிகளிலிருந்து 680 பேர்களை மீட்பதற்கு உறுதுணையாக பணியாற்றியுள்ளனர். சுமார் 10 ஆயிரம் இந்திய உணவுப் பொட்டலங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன.
15 ஆயிரம் டாலர்களுக்கு மேலாக சொந்தப் பணத்திலிருந்து பெருமாள் அண்ணாமலை மற்றும் நண்பர்கள் இந்த மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகளுக்காக செலவிட்டுள்ளனர். இந்த குழுவில் உள்ளவர்கள் அனைவரும் கணிணித் துறை வல்லுனர்கள் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
பியர்லேண்ட் மேயர் டாம் ட்ரீட் தன்னார்வலர்களையும், எம்பஸிஸ் கார்ப்பரேட் மூத்த அதிகாரிகளையும் நேரில் பாராட்டி கௌரவித்தார். இந்திய மியூசியத்தில் சாம் கண்ணப்பன் தலைமையில் இந்த சந்திப்பு நடந்தது. தன்னார்வலர்களுக்கு மதிய விருந்து உபசரித்து சாம் கண்ணப்பன் ஊக்கப்படுத்தினார்.
எம்பஸிஸ் மூத்த அதிகாரிகள், ஹூஸ்டனுக்கு நேரடியாக வருகை தந்து சீரமைப்பு பணிகளை பார்வையிட்டனர். பெருமாள் அண்ணாமலை மற்றும் குழுவினரை பாராட்டியுள்ளனர்.
அந்நிய மண்ணில் வசித்தாலும், பேரிடர் என்றால் உடனடியாக களத்தில் இறங்கி மீட்பு, சீரமைப்புப் பணிகளில் ஈடுபடுவதில், தமிழர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை ஹூஸ்டன் தமிழ் மக்கள் குழு நிருபித்துள்ளார்கள்.
-இர தினகர்