வெள்ளத்தில் அடித்துச் சென்ற லாரி டிரைவரை மீட்ட அமெரிக்க பெண் நிருபர்
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட லாரி டிரைவரை பாதுகாப்பு வாகனங்களின் உதவியுடன் அமெரிக்க செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் மற்றும் ஊழியர்கள் காப்பாற்றியுள்ளனர்.
ஹூஸ்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஹூஸ்டனில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட லாரி டிரைவரை பேரிடர் மீட்பு குழு உதவியுடன் செய்தி நிறுவன ஊழியர்கள் காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மணிக்கு 215 கிலோமீட்டர் வேகத்தில் அதாவது சுமார் 130 மைல் வேகத்தில் ஹார்வே புயல் கரையை கடந்துள்ளது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவை தாக்கியுள்ள இந்தக் கடுமையான புயலால் வெள்ளிக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது.
இதனால் ஆங்காங்கே வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் வடக்கு ஹூஸ்டன் பாலத்தின் இருந்து வெள்ள பாதிப்புகளை நேரலையாக ஒளிபரப்ப கௌ டிவி நிறுவனம் சம்பவ இடத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றது. அப்போது அந்த நிறுவனத்தின் பெண் செய்தியாளர் பிராண்டி ஸ்மித் களநிலவரத்தை கூறத் தொடங்கினார்.
.@BrandiKHOU & @KHOU_MSandoval found a truck driver trapped in floodwaters and flagged down @HCSOTexas deputies for help @KHOU #houstonflood pic.twitter.com/usVVel9LC9
— Matt Keyser (@writeonkeyser) August 27, 2017
அப்போது பாலத்தின் பக்கவாட்டில் பார்த்தபோது ஒரு லாரி முக்கால்வாசி மூழ்கி வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தது. அப்போது அதை கண்ட ஸ்மித் அதனுள் டிரைவர் இருப்பதை கண்டார். உடனே அவர் ஓட்டுநரை அழைத்து நீரில் இறங்க வேண்டாம், உங்களால் லாரியின் மீது ஏற முடியுமா என்று பாருங்கள் என்றார்.
இதைத் தொடர்ந்து அவர் அவ்வழியாக சென்ற மீட்பு வாகனத்தை அணுகினார். அதேவேளையில் அந்த நீரில் ஒரு மீட்புகுழு படகு ஒன்று வந்து கொண்டிருந்தது. டிரைவரின் நிலை குறித்து ஸ்மித் படகில் உள்ளவர்களிடம் தெரிவித்தார். அவர்கள் படகில் லாரியின் பக்கவாட்டில் சென்று டிரைவரை உயிருடன் காப்பாற்றினர்.
தன் உயிரை காப்பாற்றிய பெண் பத்திரிகையாளருக்கு டிரைவர் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார். இதை அனைத்தையும் கௌ டிவியானது நேரலையாக படம்பிடித்து ஒளிபரப்பியது.