பணமதிப்பிழப்பிற்கு பின் 50% அதிகமான கருப்பு பணம்.. காட்டிக் கொடுத்த சுவிஸ் வங்கி அறிக்கை
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்பு இந்தியாவில் இருந்து சுவிஸ் வங்கியில் பதுக்கப்படும் பணம் அதிகரித்துள்ளது.
பெர்ன்: பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்பு இந்தியாவில் இருந்து சுவிஸ் வங்கியில் பதுக்கப்படும் பணம் அதிகரித்துள்ளது.
இந்தியர்கள் மிகவும் அதிக அளவில் கருப்பு பணத்தை பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்பு சுவிஸ் வங்கியில் பதுக்கி இருக்கிறார்கள். 2016ம் வருடம் நவம்பர் மாதம் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செய்யப்பட்டது.
சுவிஸ் வங்கியில் 2017ல் ஆண்டில் எப்போதும் போடப்படுவதை விட 50 சதவிகிதம் அதிகமாக இந்தியாவில் இருந்து பணம் போடப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பணமதிப்பிழப்பு
2016ம் வருடம் நவம்பர் மாதம் 8ம் தேதி திடீர் என்று பணமதிப்பிழப்பு நடவடிக்கை செய்யப்பட்டது. இதன் காரணமாக அப்போது வழக்கத்தில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
ஏன் நடவடிக்கை
இந்த நடவடிக்கை காரணமாக கருப்பு பணம் ஒழிக்கப்படும் என்று பாஜக கட்சி தெரிவித்து இருந்தது. மக்கள்படும் கஷ்டம் நல்லதற்குத்தான் , இதனால் பெரிய அளவில் கருப்பு பணம் ஒழிக்கப்படும் என்று மோடி தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசி இருந்தார். கடந்த வருடம் நடந்த தேர்தல் பிரச்சாரங்கள் போது மொத்தமாக கருப்பு பணம் ஒழிக்கப்பட்டுவிட்டதாக கூறினார்.
என்ன நடந்தது
ஆனால் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்புதான் கருப்பு பணம் முதலீடு செய்வது அதிகமாகி உள்ளது. 2016 டிசம்பர் வரை மிகவும் குறைவாக இருந்த கருப்பு பண முதலீடு 2016 டிசம்பருக்கு பின் வெகுவேகமாக அதிகரித்துள்ளது. இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்புதான் கருப்பு பண முதலீடு சுமார் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
பயனில்லா நடவடிக்கை
2017ல் இந்தியாவில் இருந்து பணம் போட்டவர்களின் எண்ணிக்கை 2016ல் போடப்பட்டதை விட 50 சதவிகிதம் அதிக ஆகும். 2016ல் சுவிஸ் வங்கியில் 3500 கோடி ரூபாய் போடப்பட்டுள்ளது. 2017 ல் மொத்தம் 7000 கோடி ரூபாய் பணம் இந்தியாவில் இருந்து சுவிஸ் வங்கியில் போடப்பட்டுள்ளது. இது பணமதிப்பிழப்பு காரணமாக கருப்பு பணம் ஒழிக்கப்படவில்லை என்பதை தெளிவாக காட்டுகிறது. 2018ல் இது இன்னும் அதிகரித்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.