இந்தியப் பெருங்கடலில் மூழ்கிய மலேசிய விமானம்.. விடை தெரியாத சில கேள்விகள்
கோலாலம்பூர்: 239 பயணிகளுடன் பயணித்த மலேசிய விமானம் 16 நாட்கள் நீடித்த மர்மத்துக்குப் பின்னர் இந்தியப் பெருங்கடலில் வீழ்ந்து மூழ்கியதாக அறிவிக்கப்பட்டாலும் சில கேள்விகளுக்கு விடை கிடைக்காமலேயே இருக்கின்றன.
மலேசியாவிலிருந்து சீனாவுக்கு 239 பேருடன் சென்ற விமானம் 16 நாட்களுக்கு முன்பு தென்சீனக் கடற்பரப்பில் காணாமல் போனது. அதன் பின்னர் இந்த விமானம் குறித்து நாள்தோறும் திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி வந்தன.
ஒருகட்டத்தில் விமானம் கடத்தப்பட்டுவிட்டது, அந்தமான் ஆளில்லா தீவுகளில் தரை இறக்கப்பட்டுவிட்டது, தலிபான்கள் பிடியில் இருக்கிறது, சோமாலியா அல்லது எதியோப்பியாவில் இருக்கிறது, ரஷியாவில் இருக்கிறது, மலேசிய அரசியல் விவகாரங்களுக்காக கடத்தப்பட்டுவிட்டது என்றெல்லாம் ஏகத்துக்குமான செய்திகள் வெளியாகின.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்த நிலையில்தான் இங்கிலாந்து நிறுவனம் ஒன்று அதிநவீன செயற்கைக் கோள் உதவியுடன் ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியில் இந்தியப் பெருங்கடலில் மிதக்கும் சில பொருட்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து மலேசிய பிரதமர் நஜீப் ரசாக், நேற்று இரவு 239 பேருடன் பயணித்த மலேசிய விமானம் இந்தியப் பெருங்கடலில் வீழ்ந்து மூழ்கியது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இருப்பினும் இந்த கோர விபத்து சில சந்தேகங்களை எழுப்பவும் செய்கிறது.
விமானத்தின் பாகங்கள் எங்கே?
இந்தியப் பெருங்கடலில் விமானம் வீழ்ந்து மூழ்கியது எனில் உடனடியாக விமானத்தின் எந்த பொருளும் தென்படாமல் போனது எப்படி? இங்கிலாந்து நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் மலேசிய விமானத்தின் பாகங்கள்தான் என்பது எப்படி உறுதி செய்யப்பட்டது?
மூழ்கியதா? மூழ்கடிக்கப்பட்டதா?
தற்போது விமானம் மூழ்கியதா சுட்டிக்காட்டப்படும் இடம் 23 ஆயிரம் அடி ஆழம் கொண்ட கடற்பரப்பு. கடந்த 2 வாரங்களாக விமானம் விழுந்ததாக சொல்லப்பட்டு ஆராயப்பட்ட கடற்பரப்பை விட வெகுதொலைவில் இருக்கிறது.. மூழ்கிய விமானத்தின் ஒரே ஒரு துண்டு கிடைத்திருந்தால் கூட அது விபத்தா? சதிச்செயலா எனத் தெரிந்திருக்காதா?
கறுப்பு பெட்டி எப்போது கிடைக்கும்?
அத்துடன் விமானத்தின் கறுப்பு பெட்டி எப்போதுதான் கண்டுபிடிக்கப்படும்? என்பது மற்றொரு கேள்வி. ஏனெனில் 447 பேருடன் சில ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன ஏன் பிரான்ஸ் விமானத்தின் கறுப்பு பெட்டி 2 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் கண்டுபிடிக்கப்பட்டது என்பதுதான் இந்த சந்தேகத்துக்கு அடிப்படை.
எவருமே தகவல் தெரிவிக்கவில்லையே..
விமானம் விபத்துக்குள்ளாகும் முன்பு எந்த ஒரு பயணியுமே இதுபற்றிய தகவலை தெரிவிக்காமல் போனது எப்படி சாத்தியமாகும்? என்பது மிக முக்கியமான கேள்வி.
கண்காணிப்பில் இருந்து தப்பியது எப்படி?
இத்தனை கண்காணிப்பு சாதனங்கள் கடற்பரப்பை சுற்றி இருந்தும் அவற்றில் இருந்து எப்படி விமானம் தப்பியது? விமானம் அது பயணிக்க வேண்டிய தொலைவைவிட வெகுதொலைவு விலகிச் செல்வதை எவருமே கண்டுகொள்ளாதது ஏன்?
அன்று மலேசிய பிரதமர் சொன்னது என்ன?
இதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய மலேசிய பிரதமர் நஜீப் ரசாக், விமானத்தின் தொலைத் தொடர்பு கருவி விமானத்தில் இருந்த ஒருவராலேயே திட்டமிட்டு செயலிழக்கச் செய்யப்பட்டது என்றார்.
விமானிகளுக்கு தொடர்பா?
அப்படியால் விமானிகளுக்கு இந்த விபத்தில் தொடர்பு இருக்கிறதா? இது போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு இனியேனும் விடை வருமா?