4 வது மாடி ஜன்னலில் தலை சிக்கியபடி தொங்கிய 4வயது சிறுவன்.. எப்படி மீட்கப்பட்டான் என்பதை பாருங்க!
பெய்ஜிங்: சீனாவில் 4வது மாடியின் வெளியே ஜன்னலில் தலை சிக்கிய நிலையில் உயிருக்கு போராடிய 4 வயது சிறுவனை தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சீனா முழுவதும் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
கிழக்கு சீனாவின் ஷாண்டோங் மாகாணத்தில் உள்ள லினி நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 4வயது சிறுவன் தனது தாத்தா மற்றும் பெற்றோருடன் வசித்து வருகிறான். கடந்த திங்கள்கிழமை அன்று அவனது பெற்றோர் வீட்டில் இல்லை. தாத்தா மட்டுமே வீட்டில் இருந்தார்.
விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென வீட்டின் ஜன்னலில் ஏறினான். அப்போது எதிர்பாராதவிதமாக வெளியே அவன் விழுந்தான் அவனது தலை ஜன்னலின் வெளியே பாதுகாப்புக்கு போடப்பட்டிருந்த கம்பிகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டது. 4வது மாடியில் இருந்து 4வயது சிறுவன் தலை சிக்கிய நிலையில் கதறி அழுதபடி உயிருக்கு போராடினான்.
இதைபார்த்த சிறுவனின் தாத்தா உடனடியாக தீயணப்பு வீரர்களை உதவிக்கு அழைத்தார். இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள். குழந்தையை மீட்பதற்கு ஏதுவாக அவனது மார்பில் கயிறு கட்டினர். தவறி கீழே விழுந்தால் காயமின்றி பிடிப்பதற்கு ஏதுவாக பாதுகாப்பான மெத்தை போன்ற அமைப்பை கீழே கட்டிவிட்டனர். இது ஒருபுறம் எனில் ஹைட்ராலிக் ஸ்பிரட்டர் மூலம் உலோக கம்பிகளை வளைத்து அகலப்படுத்தி சிறுவனை வெற்றிகரமாக வெளியே தூக்கினர்.
இப்படி பத்திரமாக தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்ட சிறுவன் தற்போது நலமுடன் உள்ளான். 4வது மாடியில் தொங்கிய சிறுவனை மீட்கும் வீடியோ காட்சிகள் சீனாவின் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.