சப்பான்காரன் மூளையே மூளை... உடனே இதை சென்னைக்கும் கொண்டு வர வேண்டும்!
டோக்கியோ: சென்னையில் மழை நீரைப் பார்த்தும், வெள்ளத்தைப் பார்த்தும் மக்கள் கடுப்பாகி, கலங்கிப் போய் நிற்கிறார்கள். ஆனால் இந்த ஜப்பானில் வெள்ளம் குறித்து கிஞ்சித்தும் கவலை இல்லாமல் ஜாலியாக இருக்கிறார்கள். காரணம், அந்த நாட்டு அரசாங்கம் ஏற்படுத்தி வைத்திருக்கும் அட்டகாசமான ஒரு அமைப்பு.
அதாவது தரைப்பரப்பில் மழை மற்றும் வெள்ளத்தால் தாறுமாறாக குவியு்ம் தண்ணீரை சுரங்கக் குழாய்கள் மூலமாக சேகரித்து அழகாக ஆற்றுக்குக் கொண்டு போய் விட்டு விடுகிறார்கள். ஒரு சொட்டு கூட சிந்தாமல் சிதறாமல் இந்த மழை நீர் வெள்ளமானது, ஆற்றுக்குப் பத்திரமாக போய் விடுகிறது.
இது பாதாள சுரங்க அமைப்பாகும். . இதை பூமிக்குக் கீழே அமைத்துள்ளனர். நான்கு மைல் நீளத்திற்கு இது இருக்கிறது.
ராட்சத சுரங்கக் குழாய்கள்
பூமிக்குக் கீழே ஏராளமான ராட்சத சுரங்கக் குழாய்களை நிர்மானித்துள்ளனர். இந்த சுரங்க உருளையின் மையப் பகுதியானது நான்கு டர்பைன் என்ஜின்களால் இயக்கப்படுகிறது. போயிங் 737 விமானத்தில் பயன்படுத்தப்படும் அதே ரக என்ஜின்தான் இது.
கால்பந்து மைதானத்திற்குக் கீழே
டோக்கியோவுக்கு வெளியே ஒரு சிறிய அரசு அலுவலக கட்டட வளாகத்தில்தான் இந்த சுரங்கத்தை நிர்மானித்துள்ளனர். அங்குள்ள கால்பந்து மைதானத்திற்குக் கீழே இந்த சுரங்கம் உள்ளது.
அபாரமான பொறியியல் அற்புதம்
மிகச் சிறந்த அபாரமான பொறியியல் அற்புதமாக இது திகழ்கிறது. ஜப்பானில் வெள்ளமும், புயல்களும் அதிகம். ஆனால் இப்படிப்பட்ட சிக்கலான நிலையிலும் கூட வெள்ள நீரை அழகாக திசை திருப்ப அவர்கள் செய்துள்ள இந்தப் பணி அசர வைக்கிறது.
எவ்வளவு வெள்ளண் வந்தாலும் தாங்கும்
டோக்கியோ நகர மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படாமல் காப்பாற்றப்படுவதை இந்த சுரங்க மழை நீர் சேகரிப்பு அமைப்பு உறுதி செய்கிறது.
3 பில்லியன் டாலர் செலவில்
இந்த சுரங்க மழை நீர் சேகரிப்பு அமைப்பானது 1993ம் ஆண்டு தொடங்கி 2006ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இதற்கான செலவுத் தொகை 3 பில்லியன் டாலராகும்.
அட்டகாசம்
இந்த சுரங்க கட்டமைப்புக்குள் எட்டிப் பார்த்தால் ஜேம்ஸ் கேமரூன் படம் பார்ப்பது போலவே இருக்கும். அப்படி ஒரு ஹை பையான கட்டமைப்பு இது. சயின்ஸ் பிக்ஷன் படம் போலவே இதன் கட்டமைப்பு உள்ளது.
ஐந்து அடுக்கு மாடிக் கட்டடத்தை விட உயரம்
ஒரு மாபெரும் தண்ணீர்த் தொட்டியின் நீளம் 320 அடியாகும். ஐந்து அடுக்கு மாடிக் கட்டடத்தை விட உயரமானது இது.
குழாய் மூலம் ஆற்றுக்குப் போகும் வெள்ளம்
இங்கிருந்து நான்கு மைல் தூரத்திற்கு பைப்புகள் போட்டுள்ளனர். அதன் மூலமாகத்தான் நகரில் சேகரமாகும் வெள்ள நீரானது இடோ ஆற்றுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
நிம்மதிப் பெருமூச்சு விடும் நிலங்கள்
வழக்கமாக டோக்கியோவில் ஏற்படும் வெள்ளப் பெருக்கால் நாகா ஆற்றுப் படுகையில் பெரும் சேதங்கள் ஏற்படும். தற்போது அது தவிர்க்கப்படுகிறது. அங்குள்ள விவசாய நிலங்கள் தற்போது நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனவாம்.
இடோ ஆறு
இங்குள்ள தண்ணீத் தொட்டிகளில் நீர் நிரம்பியதும் டர்பைன் மூலம் இந்த சுரங்க என்ஜினை இயக்கி சேகரமான தண்ணீரை இடோ ஆற்றுக்குக் கொண்டு செல்கின்றனர்.
ஜப்பானின் பெருமை
எவ்வளவு பெரிய மழை பெய்தாலும், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டாலும் அதை இதை வைத்து சமாளிக்க முடியும் என்று ஜப்பானிய பொறியாளர்கள் பெருமையுடன் சொல்கிறார்கள்.
உண்மையில் சென்னை, மும்பை போன்ற இந்திய நகரங்களுக்குத்தான் இது முதலில் தேவை.