கேரளாவில் ஆட்டம் போட்ட கொரோனா -லட்சத்தீவுக்குள் நுழையவே முடியலை..அரபிக் கடல் தீவின் அசால்ட் வெற்றி
கரவெட்டி: இந்தியாவில் கொரோனா பாதிக்காத ஒரு நிலப்பரப்பாக திகழ்கிறது லட்சத்தீவு. தொடக்க முதலே கட்டுப்பாடுகளை கடுமையாக பின்பற்றியதால்தான் அரபிக் கடலின் அழகு முகமான லட்சத்தீவு அசாத்திய சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.
Recommended Video
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு 1.25 லட்சத்தை தாண்டிவிட்டது. கொரோனா மரணங்கள் 4 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. உலக நாடுகளை ஒப்பிடுகையில் ஒரே நாள் பாதிப்புகளில் இந்தியாவும் முதல் 5 இடங்களில் அவ்வப்போது எட்டிப்பிடித்து விடுகிறது.
கொரோனா பரவுவதைத் தடுக்க ஒட்டுமொத்த தேசம் முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. என்னதான் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபோது 3 மாதங்களுக்கு முந்தைய இயல்பு வாழ்க்கைக்கு இன்னமும் இந்தியா திரும்பவில்லை. கொரோனாவின் தாக்கம் எத்தகைய விளைவுகளை எத்தனை ஆண்டுகாலத்துக்கு ஏற்படுத்துமோ என்பது விடை தெரியாத புதிர்.
மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 2940 பேருக்கு கொரோனா- கேரளாவிலும் 42 பேருக்கு பாதிப்பு!
கொரோனா தாக்காத நிலம்
ஆனால் நமது நாட்டில் லட்சத்தீவுகள் கொரோனா பாதிப்பு எதுவும் இல்லாத ஒரு யூனியன் பிரதேசமாகவே திகழ்கிறது. தொடக்கத்தில் வடகிழக்கு மாநிலங்கள் இப்படி கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்தன. ஆனால் பின்னர் கொரோனா அங்கும் தாக்குதலை தொடுத்தது. தற்போது சிக்கிம், நாகாலாந்து போன்ற மாநிலங்கள் கொரோனாவின் பிடியில் இருந்து விடுபட்டுள்ளன. லட்சத்தீவுகளைப் பொறுத்தவரையில் கேரளாவுடன் ஒட்டிய பிரதேசம்.
கேரளாவை சார்ந்த நிலம்
லட்சத்தீவின் அத்தனை தேவைகளுக்கும் கேரளாவைத்தான் சார்ந்திருக்க வேண்டும். ஆனால் கேரளாவில்தான் நாட்டில் கொரோனா தொடக்க நிலையில் பேயாட்டம் போட்டது. இருந்தபோதும்கூட லட்சத்தீவில் கொரோனா எட்டிப்பார்க்க முடியவில்லை. இதுபற்றி லட்சத்தீவு சுகாதாரத்துறை செயலாளர் சுந்தரவடிவேலு கூறுகையில், கொரோனா பரவுகிறது என்ற தகவல் வந்த போதே வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், உள்நாட்டு சுற்றுலா பயணிகள் லட்சத்தீவுகளுக்குள் நுழைவதை கட்டுப்படுத்திவிட்டோம்.
விரிவான சோதனை
ஒருகட்டத்தில் அனைத்து பயணிகளும் லட்சத்தீவுகளுக்குள் நுழைவதற்கும் தடை விதித்தோம். லாக்டவுன் அமல்படுத்தப்பட்டபோது பிற மாநிலங்களில் இருந்து லட்சத்தீவுகளுக்கு திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்தனர். அவர்களுக்கு கொச்சியிலும் மங்களூருவிலும் கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டன. கொரோனா சோதனை முடிவுகளில் நெகட்டிவ் என வந்தால்தான் லட்சத்தீவுகளுக்குள் அனுமதிக்கப்படுவர் என்கிற நிலையை உருவாக்கி இருந்தோம் என்கிறார்.
உடனடி சோதனைகள்
மேலும் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் மூலமாக வீடு வீடாக கொரோனா குறித்து எடுத்துரைக்கப்பட்டது. கொரொனா அறிகுறி இருப்பவர்கள் குறித்து தகவல் பெறப்பட்டது. அவர்களது மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் அப்படி அனுப்பி வைக்கப்பட்ட அனைத்தும் நெகட்டிவ் என்றே வந்தது என்கிறார் சுந்தரவடிவேலு. நாட்டின் பிற பகுதிக்கு சென்றுவிட்டு லட்சத்தீவு திரும்பியவர்கள் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்துதல் முகாம்களில் தங்க வேண்டும் என்பதையும் கடைபிடித்தோம். அவர்களது குடும்பங்கள் கூட தனிமைப்படுத்தப்பட்டன என்றும் விவரித்தார் சுந்தரவடிவேலு.
லட்சத்தீவுகளின் பெருமிதம்
கரவெட்டியில் இந்திரா காந்தி மருத்துவமனை அருகே உள்ள கட்டிடம் கொரோனா மருத்துவமனையாக்கப்பட்டது. இத்தனைக்கும் லட்சத்தீவில் வைரால்ஜி லேப் கூட இல்லை. எர்ணாகுளத்துக்குத்தான் அனுப்ப வேண்டும் என்கிற நிலைதான் லட்சத்தீவில் இருந்தது. கேரளாவின் அளப்பரிய ஒத்துழைப்புடன் கொரோனா இல்லாத தாய்நிலமாக மாறியிருக்கிறது லட்சத்தீவுகள் என்பது எவ்வளவு பெருமிதம்!