இந்த பூமியால் எவ்வளவு பேரைத்தான் தாங்க முடியும்?
வாஷிங்டன்: இந்த அண்டவெளியில் பூமியானது ஒரே தம்மாத்தூண்டு புள்ளி போல. அண்டத்தைப் பொறுத்தவரை நாமெல்லாம் ஒரு கொசுறு போல. ஆனால் பூமியில் உள்ள நமக்கு இது மிகப் பிரமாண்டமானதுதான். பல லட்சம் ஷங்கர் படங்களுக்கு இணையான பிரமாண்டம் போன்றது இந்த பூமி. ஆனால் இந்த பூமியால் எத்தனை பேரை தாங்க முடியும் என்று நாம் யோசித்ததுண்டா?
பூமியின் பெரும்பகுதி தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. அதாவது 70 சதவீதம் தண்ணீர்தான். மீதப் பகுதியில்தான் நிலம் உள்ளது.
அங்குதான் நாமெல்லாம் ஒட்டிக் கொண்டிருக்கிறோம், வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறோம்.
150 மில்லியன் ச.கி.மீ...
பூமியின் நிலப்பரப்பானது கிட்டத்தட்ட 150 மில்லியன் சதுர கிலோமீட்டர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலத்திற்குள்தான் நாம் நாட்டாமை செய்து கொண்டிருக்கிறோம், அன்பு செலுத்துகிறோம், அடித்துக் கொள்கிறோம், நம்மை நாமே "அழித்தும் கொல்கிறோம்".
எத்தனை பேரைத் தாங்கும்...
இந்த நிலையில் நமது பூமி எத்தனை பேர் வரை தாங்கும் என்ற சுவாரஸ்யமான கேள்வி ஒன்று எழுந்துள்ளது. பூமியின் நிலவரப்படி எத்தனை பேர் வரை இங்கு வசிக்க முடியும், இருக்க முடியும் என்பதே இந்த கேள்வியின் சாராம்சம்.
மக்கள் தொகை...
தற்போது பூமியின் மக்கள் தொகையானது 7 பில்லியன் ஆகும். இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே போகிறது. இந்த நூற்றாண்டின் இறுதியில் அது 10 பில்லியனாக உயரும் நிலை உள்ளது.
10 பில்லியன் ஓகே...
எனவே எந்த அளவு வரை பூமியில் மக்கள் பெருக்கம் அதிகரிக்க முடியும், எவ்வளவு மனிதர்களை இந்த பூமி தாங்க முடியும் என்ற ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 9 முதல் 10 பில்லின் மக்கள் தொகை வரை பூமிக்கு பிரச்சினை இல்லை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
அடுத்து செவ்வாய் தான்...
இதுகுறித்து ஹார்வர்ட் பல்கலைக்கழக சமூக உயிரியல் துறை தலைவர் எட்வர்ட் வில்சன் கூறுகையில், "தற்போதைய பூமியின் நிலவரப்படி, வரும் காலத்தில் 3.5 பில்லின் ஏக்கர் அளவிலான நிலப்பரப்பில் மனிதர்களால் வசிக்க முடியும். அந்த வகையில் பார்த்தால் 10 பில்லியன் மனிதர்கள் வரை பூமியால் தாங்க முடியும்" என்று கூறியுள்ளார்.
அப்ப அதற்கு மேல் மக்கள் தொகை அதிகரித்தால் என்ன செய்வார்கள்.. வேறென்ன செவ்வாய்தான்!