அவ்வளவு பெரிய நாடு.. நோயாளிகள் எண்ணிக்கை ரொம்ப கம்மி.. கொரோனா வைரசை எப்படி கட்டுப்படுத்தியது ரஷ்யா?
மாஸ்கோ: உலகமே கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வரும் நிலையில், அனைத்து நாடுகளின் ஆச்சரிய பார்வையும் ரஷ்யாவை நோக்கி திரும்பியுள்ளது.
14.6 கோடி மக்கள் தொகை.. சீனாவுடன், சுமார் 4,200 கிலோ மீட்டர் தூர நீண்ட எல்லைப் பரப்பு.. இப்படி இருந்தும் கூட, ரஷ்யாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக குறைவாக இருப்பதுதான் இதற்கு காரணம்.
ரஷ்யாவில், இதுவரை 306 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ரஷ்யா நடத்திய பரிசோதனையுடன் ஒப்பிட்டால், கொரோனா நோயாளிகள் விகிதம் என்பது 0.21% மட்டும்தான். உலகிலேயே, கொரோனா வைரஸ் குறைவாக பதிவாகியுள்ள இரண்டாவது நாடு ரஷ்யா. முதலாவது நாடு ஐக்கிய அரபு எமிரேட்ஸ். அது ரஷ்யாவுடன் ஒப்பிட்டால் குட்டி நாடாகும். அங்கு 0.11% என்ற அளவில் பாதிப்பு இருந்தது.
கொரோனா அச்சத்தால் தனிமைப்படுத்திக் கொள்வதாக ஜெர்மன் அதிபர் ஏஞ்சலினா மெர்கல் அறிவிப்பு
நிறைய சோதனைகள்
ரஷ்யா 133,101 டெஸ்ட்களை மேற்கொண்டுள்ளது, இது சீனா, இத்தாலி மற்றும் தென் கொரியாவுக்கு அடுத்தபடியாக உள்ளது. பிரிட்டன் 64,600 சோதனைகளைச் செய்துள்ளது, ஆனால் 3,000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர். நார்யில், 44,000 சோதனைகள் 1,700 நோயாளிகள் என்ற விகிதாச்சாரம் இருந்தது.
ஜனவரியிலேயே
ரஷ்யாவின் ஆரம்பகால அதிரடி நடவடிக்கைள்தான் இப்படி, கட்டுப்பாடாக வைத்திருப்பதில் முக்கிய பங்களிப்பு அளித்ததாக கூறுகிறார்கள் சில நிபுணர்கள். ஜனவரி 30 ஆம் தேதிக்கு முன்னதாக சீனாவுடனான அதன் 2,600 மைல் எல்லையை ரஷ்யா மூடிவிட்டது. தனிமைப்படுத்தப்பட்ட மண்டலங்களை அமைத்தது.
அமெரிக்கா தாமதம்
புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்கா மார்ச் மாத தொடக்கத்தில் மட்டுமே சோதனையின் வேகத்தை அதிகரித்தது. அதே நேரத்தில் பிப்ரவரி தொடக்கத்தில் இருந்து விமான நிலையங்கள் உட்பட்ட பகுதிகளில், ஈரான், சீனா மற்றும் ஐரோப்பிய பயணிகளை இலக்கு வைத்து, மையமாகக் கொண்டு பெருமளவில் சோதனை செய்து வந்ததாக ரஷ்யா கூறுகிறது. இந்த வேகம்தான் முக்கியம்.
உலக சுகாதார அமைப்பு
ரஷ்யாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி டாக்டர் மெலிடா வுஜ்னோவிக் கூறுகையில், ரஷ்யா உண்மையில் ஜனவரி இறுதியில் தனது கெடுபிடிகளை தொடங்கிவிட்டது. சோதனையை தாண்டி ரஷ்யா பரந்த அளவிலான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று வுஜ்னோவிக் கூறினார்.
பரிசோதித்தல் மற்றும் அடையாளம் காணுதல், தொடர்புகளைக் கண்டறிதல், தனிமைப்படுத்துதல், இவை அனைத்தும் WHO கூறிய வழிமுறைகளின்படி ரஷ்யாவில் நடந்தது என்றும் அவர் கூறினார்.
சந்தேகம்
ஆனால் ரஷ்யா தனது புள்ளி விவரங்களை மறைத்திருக்க கூடும் என ஐரோப்பிய நிபுணர்கள் மற்றும் ஊடகங்கள் சந்தேகிக்கின்றன. ரஷ்யா வரலாற்று ரீதியாகவே, ஒரு இரும்புத் திரையிட்ட நாடு என்கிறார்கள் அவர்கள். 1980களில் பரவிய எய்ட்ஸ், 1986ல் நடந்த, செர்னோபில் அணுசக்தி பேரழிவு போன்றவற்றை ஆரம்பத்தில் ரஷ்யா மூடி மறைத்ததை அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
கடந்த சில நாட்கள் அதிகம்
"ரஷ்யா கூறும் அளவு பரிசோதனைகளைச் செய்திருந்தால், அவர்கள் சொல்லும் நோயாளிகள் எண்ணிக்கை மிகக் குறைவு" என்று பிரிட்டனின் கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தின் சுகாதாரப் பாதுகாப்பு பேராசிரியர் பால் ஹண்டர் தெரிவித்துள்ளார். அதேநேரம், ரஷ்யாவில் கொரோனா வைரஸின் வளர்ச்சி இப்போது வேகத்தை அதிகரிப்பதாகத் தோன்றுகிறது. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று நோயாளிகள் புதிதாக சேர்கிறார்கள்.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் புது நோயாளிகள் எண்ணிக்கை 150 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. மாஸ்கோவில் 79 வயதான ஒரு பெண் வியாழக்கிழமை கொரோனாவால் உயிரிழந்தார். அந்த நாட்டில் சம்பவித்த முதலாவது மற்றும் இதுவரை இறுதியான கொரோனா வைரஸ் பலி அதுதான். ம் நகர்ந்துள்ளது.
முன்னெச்சரிக்கை அவசியம்
ரஷ்யா மே 1 வரை அனைத்து வெளிநாட்டினருக்கும் அனுமதி மறுத்துள்ளது. மாஸ்கோவில், பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, மேலும் நகரத்தை லாக் செய்வது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் உள்ளன. மாஸ்கோவிற்கு வெளியே, கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு 500 நபர்கள் கொண்ட ஒரு மருத்துவமனையை கட்டத் தொடங்கியுள்ளனர். இவையெல்லாம் ரஷ்யா சொல்லும் தற்காப்பு நடவடிக்கைகள். ஆனால் ஒரு விஷயம், ஜனவரி மாதமே முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளது, ரஷ்யா. இந்தியா மார்ச் மாத இறுதியில்தான் அதை செய்ய ஆரம்பித்துள்ளது. அதற்கும், மக்கள் ஒத்துழைப்பு முழுமையாக கிடைக்கவில்லை. வீட்டை விட்டு வெளியே சுற்றுவோர் அதிகமாக உள்ளனர். அதுதான் அச்சத்தை அதிகரிக்கிறது.