இந்தியாவுடன் ஒரே நேரத்தில் லாக்டவுன் ஆரம்பித்த தென் ஆப்பிரிக்கா.. 7 மடங்கு கொரோனா குறைந்தது எப்படி?
டர்பன்: இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் ஒரே நேரத்தில் கடுமையான லாக்டவுன் நடவடிக்கைகளை செயல்படுத்தின. ஆனால், இந்தியாவைவிடவும், தென் ஆப்பிரிக்காவில், கொரோனா பாதிப்பு பதிவு விகிதம் 7 மடங்கு குறைந்துள்ளது.
Recommended Video
நாட்டின் முதல் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா பாதிப்பு ஜனவரி 30ம் தேதி கண்டறியப்பட்டது. 54 நாட்களுக்குப் பிறகு, மார்ச் 24 அன்று இந்தியா தேசிய அளவில் லாக்டவுன் செய்வதாக அறிவித்தது. 21 நாட்கள் கெடு விதிக்கப்பட்டன.
தென்னாப்பிரிக்கா மார்ச் 26 அன்று லாக்டவுனை அறிவித்தது. மார்ச் 5ம் தேதி அந்த நாட்டில் முதல் கொரோனா நோயாளி கண்டறியப்பட்டார். அதற்கு 21 நாட்களுக்குப் பிறகு லாக்டவுன் கொண்டுவரப்பட்டது.
ஒப்பீடு
திங்கள்கிழமையான நேற்று காலை நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா 559 பேரை பலிகொண்டுள்ளது. 17,615 நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர்.
தென்னாப்பிரிக்காவில் 54 பேர் பலியாகியுள்ளனர். 3,158 நோயாளிகள் மட்டுமே உள்ளனர். மக்கள்தொகை, சமூக அரசியல் உள்ளிட்ட பல விஷயங்களில் இந்தியாவையும், தென் ஆப்பிரிக்காவையும், ஒரே மாதிரி வைத்து ஒப்பிட முடியாதுதான். ஆனாலும், தென் ஆப்பிரிக்காவிடமிருந்து இந்த விஷயத்தில் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் குறைவு
இந்தியாவில் லாக்டவுன் தொடங்கிய நாளில், நாட்டில் மொத்தம் 536 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். 18 பேர் பலியாகியிருந்தனர். ஆனால், இதற்கு மாறாக, தென்னாப்பிரிக்கா லாக்டவுனை தொடங்கியபோது, 927 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். அந்தந்த லாக்டவுன் காலகட்டத்தில், கிட்டத்தட்ட ஒரு மாதத்தில், இந்தியாவில் 17,079 புதிய நோயாளிகளும், தென்னாப்பிரிக்காவில் 2231 புதிய நோயாளிகளும் மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். லாக்டவுன் காலத்தில், இந்தியாவில் 541 பேர் கொரோனாவால் பலியான நிலையில் தென் ஆப்பிரிக்காவில் 54 பேர் மட்டுமே.
என்ன காரணம்
தென்னாப்பிரிக்கா அதிகமாக ஒரே நாளில் பார்த்த மிகப்பெரிய பாதிப்பு என்பது, அதன் லாக்டவுனுக்கு அடுத்த நாளில். அன்று 243 புதிய நோயாளிகள் பதிவாகியிருந்தனர். இவ்வளவு வித்தியாசம் ஏற்பட என்ன காரணம்? இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய வேறுபாடு சோதனை உத்தி ஆகும். லாக்டவுனுக்கு பின்னரும் கூட, இந்தியா மெதுவாகத்தான் சோதனையைத் தொடர்ந்தது. வெளிநாட்டு பயண வரலாறு இல்லாமல், கொரோனா நோய் அறிகுறி இருந்தவர்களுக்கு ஏப்ரல் 9 முதல்தான் இந்தியா பரிசோதனையை நடத்த ஆரம்பித்தது. அதுவரை வெளிநாடு ரிட்டர்ன்ஸ் மட்டுமே டார்கெட் செய்யப்பட்டது.
அதிக பரிசோதனைகள்
தென்னாப்பிரிக்கா எதிர் வழியில் சென்றது, சோதனையை அதிகரித்தது மற்றும் அனைத்து மக்களையும் டெஸ்ட் செய்ய முனைந்தது. அதன் தேசிய லாக்டவுனுக்கு 15 வது நாளில், 64,000 சோதனைகளை நடத்தியது, அதில் பெரும்பகுதி தனியார் துறையால் செய்யப்பட்டது. தென்னாப்பிரிக்கா தனது முதல் நோயாளியைக் கண்டறிந்த 21 நாட்களில் லாக்டவுன் செய்யப்பட்டது. பிப்ரவரி 20 அன்று இந்தியாவில் மூன்று கொரோனா நோயாளிகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டனர். ஜனவரி 30ம் தேதி அன்று கண்டறியப்பட்ட முதல் நோயாளிக்கு பிறகு 21 நாட்கள் கழித்தும் 3 நோயாளிகள்தான் இந்தியாவில் இருந்தனர். அல்லது கண்டுபிடிக்க முடிந்தது என்பது இதன் பொருள்.
வெற்றி ரகசியம்
இதற்கு மாறாக, முழு லாக்டவுன் அறிவிக்கப்படுவதற்கு முன்பே தென்னாப்பிரிக்கா 900 நோயாளிகளுக்கும் மேல் கண்டறிந்தது. இந்தியாவுடன் ஒப்பிடும்போது தென் ஆப்பிரிக்காவில் நோயாளிகள் எண்ணிக்கை ஆரம்பத்தில் அதிகமாக இருக்க காரணம், முறையான சோதனை அதிகமாக நடத்தப்பட்டதாக இருக்கலாம்.
தினமும் 36,000
மார்ச் 5 ஆம் தேதி, முதல் நோயாளி தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒரே வாரத்தில், தென்னாப்பிரிக்கா 47,000 பேரை சோதனை செய்து முடித்துவிட்டது. சோதனை மையங்கள் மற்றும் கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகள் மூலம் ஒரு நாளைக்கு 36,000 பேரை சோதிக்கும் திறன் இப்போது அந்த நாட்டுக்கு உள்ளது. ஆனால், இரு நாட்கள் முன்புவரை, அதாவது ஏப்ரல் 19ம் தேதி நிலவரப்படி, இந்தியாவில், இத்தனை மாதங்களில், மொத்தமே, 4,01,586 சேம்பிள்கள்தான் டெஸ்ட் செய்யப்பட்டிருந்தன. 5.78 கோடி என்ற தென் ஆப்பிரிக்க மக்கள் தொகையோடு ஒப்பிட்டால், நமது மக்கள் தொகை மிக அதிகம். அப்படியிருக்கும்போது பரிசோதனைகளின் வேகத்தை அதிகரிப்பது ஒன்றே, லாக்டவுனின் நோக்கத்தை பூர்த்தி செய்து, கொரோனாவை ஒழிக்க முடியும்.