பாகிஸ்தானுடன் மல்லுக்கு நின்ற டிரம்ப்.. ஒரு டிவிட்டில் இருநாட்டு உறவை முறித்தது எப்படி?
அமெரிக்க அதிபர் டிரம்ப் டிவிட்டர் மூலம் தன்னுடைய வெளியுறவு கொள்கைகளை தெரிவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது.
வாஷிங்டன்: டிவிட்டர் மூலம் அரசியல் செய்வது தற்போது முதல் இடத்தில் யார் இருக்கிறார் என்ற போட்டிதான் நடந்து கொண்டு இருக்கிறது. அரசியலுக்கு வர ஆசைப்படுபவர்கள் தொடங்கி அமெரிக்க அதிபர் வரை அனைவரும் டிவிட்டர் மூலம்தான் அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் டிரம்ப்பின் புத்தாண்டு டிவிட் காரணமாக பெரிய பிரச்சனையே உருவாகி இருக்கிறது. இதனால் பாகிஸ்தானிற்கும், அமெரிக்காவிற்கும் இடையில் நிலவும் மொத்த உறவே உடைந்து போய் இருக்கிறது.
பாகிஸ்தான் அமெரிக்காவுடனான ராணுவ உறவையே முறித்துக் கொண்டு இருக்கிறது. வெறும் வாய்க்கால் தகராறு ஆசியாவின் அரசியல் சூழ்நிலையையே மாற்ற இருக்கிறது.
|
அதிபர் டிவிட்
புத்தாண்டு அன்று மாலை அதிபர் டிரம்ப் முதல் டிவிட்டை எழுதினார். அதில் ''கடந்த 15 வருடமாக அமெரிக்கா பாகிஸ்தானுக்கு முட்டாள் போல உதவி இருக்கிறது. 33 பில்லியன் டாலர் அவர்களுக்கு கொடுத்து இருக்கிறோம். ஆனால் பதிலுக்கு பாகிஸ்தான் ஏமாற்றி இருக்கிறது.நாங்கள் கஷ்டப்பட்டு தேடும் தீவிவாதிகளுக்கு பாகிஸ்தான் இடம் அளிக்கிறது'' என்று குறிப்பிட்டு இருந்தார்.
என்ன பிரச்சனை
மேலும் இனி மேல் பாகிஸ்தானிற்கு பொருளாதார ரீதியாக உதவி செய்ய போவதில்லை என்று அதிர்ச்சி அளித்தார். இதனால் 1 பில்லியன் டாலர் வரை உதவி நிறுத்தப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் கடைசியாக 2 பில்லியன் டாலர் வரை உதவி நிறுத்தப்பட்டது. இந்திய மதிப்பில் இது 12 ஆயிரம் கோடியாகும்.
உறவு
இந்த விஷயத்திற்கு உடனடி பதில் அளிக்காத பாகிஸ்தான் நேற்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. இனி அமெரிக்காவுடன் ராணுவ உறவே கிடையாது என்று தெரிவித்துள்ளது. மேலும் புலனாய்வு மற்றும் ராணுவ ஒத்துழைப்பு சம்பந்தமான அனைத்து உதவிகளையும் நிறுத்திக் கொள்ள போவதாக கூறியுள்ளது. ஆசியாவில் சீனாவிற்கு பின் பாகிஸ்தான் மட்டுமே இப்படி அமெரிக்காவை நேரடியாக எதிர்த்துள்ளது.
அரசியல்
இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் பேசியுள்ளனர். அதில் ''டிவிட்டர் மூலம் அரசியல் செய்தால் இப்படித்தான் நடக்கும். டிரம்ப் எப்போது என்ன பேசுவார் என்று தெரியவில்லை. அவர் டிவிட்டரில் பேசுவதை சீரியசாக எடுக்க வேண்டுமா, கூடாதா என்று கூட தெரியவில்லை, அவரின் டிவிட்டர் அரசியலால் நாங்கள் பைத்தியம் போல ஓடுகிறோம்'' என்று குறிப்பிட்டு உள்ளார்.