மோடியும், டிரம்பும் போகும்போதா இப்படியாகனும்.. 'ஹவுடி மோடி' நடைபெற உள்ள ஹூஸ்டனில் சூறாவளி, மழை
வாஷிங்டன்: மோடியுடன், டிரம்பும் ஒரே மேடையில் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ள அமெரிக்காவின் ஹூஸ்டனில், பெரும் காற்றழுத்த தாக்குதலும், மழை வெள்ளமும் ஏற்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 21 முதல் செப்டம்பர் 27 வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். செப்டம்பர் 21 முதல் செப்டம்பர் 27 வரை மோடியின் சுற்றுப் பயணம் நிகழ உள்ளது. இதில் டெக்சாஸில் 'ஹவுடி மோடி' (haudi modi) நிகழ்ச்சியில் பங்கேற்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில்முறை கால்பந்து மைதானங்களில் ஒன்றான என்.ஆர்.ஜி ஸ்டேடியத்தில் "ஹவுடி, மோடி" நிகழ்வு நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் 50,000 பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோடியுடன், டிரம்பும் ஒரே மேடையில் பங்கேற்று பல அதிரடி அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கான பாஸ்களை இலவசமாக www.howdymodi.org என்ற இணையதளத்தில் பதிவு செய்வதன் மூலம் பெற முடியும். எனவே இந்த மாபெரும் நிகழ்வில் கலந்து கொள்ள மக்கள் ஆர்வம் காட்டினர்.
இந்த நிலையில்தான், நிகழ்ச்சிக்கு ஒரு பெரும் சிக்கல் எழுந்துள்ளது. ஏனெனில், ஹூஸ்டனில் வெப்பமண்டல காற்றழுத்தம் காரணமாக, பெரும் அழிவுகள் ஏற்பட்டுள்ளன. ஆளுநர் டெக்சாஸின் பல பகுதிகளில் அவசரநிலையை பிரகடனப்படுத்தும் அளவுக்கு அங்கே நிலைமை மோசமாகியுள்ளது.
வெப்பமண்டல காற்றழுத்தம் 'இமெல்டா' வியாழக்கிழமை டெக்சாஸ் மாகாணத்தின் பல பகுதிகளை தாக்கி புரட்டிப் போட்டது. பலத்த மழையால் மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டதோடு, டெக்சாஸில் உள்ளவர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டனர். தென்கிழக்கு டெக்சாஸில் 13 மாவட்டங்களில் டெக்சாஸ் கவர்னர் கிரெக் அபோட் அவசரகால நிலையை அறிவித்துள்ளார்.
அதிக மழைப்பொழிவு பெற்ற பகுதிகள் இப்போது அதிலிருந்து மீண்டு வருவதாக தேசிய வானிலை சேவை மையம் தெரிவித்துள்ளது, ஆனால் ஃபோர்ட் பெண்ட், ஹாரிஸ் மற்றும் கால்வெஸ்டன் மாவட்டங்களில் சில பகுதிகளில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இரண்டு முதல் மூன்று அங்குலம் கூடுதல் மழை பெய்து வருகிறது கவனிக்கத்தக்கதாக உள்ளது.
இதுபோன்ற நிலைக்கு நடுவேயும், 'ஹவுடி மோடி' நிகழ்ச்சியின் அமைப்பாளர்கள் இன்னும் உற்சாகமாகவே இருக்கிறார்கள், என்.ஆர்.ஜி ஸ்டேடியத்தில் நடைபெறவிருக்கும் 'ஹவுடி மோடி' நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் இந்த நிகழ்வு ஒரு வாழ்நாள் அனுபவமாக இருக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
"ஞாயிற்றுக்கிழமை ஒரு அற்புதமான நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இது ஒரு குடும்ப கொண்டாட்டம் போல இருக்கும் என்று நாங்கள் சொல்ல விரும்புகிறோம், நாங்கள் ஒற்றுமையாக வெற்றி பெறுகிறோம். நாங்கள் பலமாக இருக்கிறோம். நாங்கள் ஹூஸ்டனுக்கு சேவை செய்தோம்" என்கிறார் விழா ஏற்பாட்டாளர் ஒருவர்.
கிரேட்டர் ஹூஸ்டனின் இந்தோ அமெரிக்க சேம்பர் ஆஃப் காமர்ஸின் தலைவர் ஸ்வப்னா அளித்த பேட்டியில் "2018ம் ஆண்டு, நவம்பரில், ஹூஸ்டன் மேயராக சில்வெஸ்டர் டர்னர் பொறுப்பேற்ற பின்னர் இருதரப்பு உறவுகள் வலுவாக இருந்தன என்பதைக் காண்கிறோம், மோடியின் ஹூஸ்டன் வருகை மற்றும் டிரம்ப் மற்றும் உயர் தலைமை நிர்வாக அதிகாரிகளுடனான சந்திப்புகள் ஹூஸ்டனின் வணிக வாய்ப்புகளை அதிகரிக்கவும், புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் உதவும். எண்ணெய் மற்றும் எரிவாயு, சுகாதார துறைகளில் வளர்ச்சி ஏற்படும்" என்ற நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார்.