சிக்கன நடவடிக்கை... எச்எஸ்பிசி வங்கியில் 10 ஆயிரம் பேருக்கு வேலை பறிபோகிறது
லண்டன்: எச்எஸ்பிசி வங்கியின் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரி நோயல் க்வின் வங்கியின் செலவுகளை குறைக்க முயற்சியாக எச்எஸ்பிசி ஹோல்டிங்ஸ் நிறுவனத்தில் 10,000 வேலைகளை குறைக்க திட்டமிட்டுள்ளார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த சர்வதேச வங்கி நிறுவனம் எச்எஸ்பிசி . இந்த நிறுவனத்தின் கிளைகள் பல்வேறு நாடுகளில் உள்ள முக்கிய நகரங்களில் உள்ளது. இந்த நிறுவனம் தற்போது உலகளாவிய பொருளாதார மந்த நிலையால் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதன் காரணமாக வங்கி நிர்வாகம் சிக்கன நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது
இது தொடர்பாக ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், எச்எஸ்பிசி வங்கியின் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரி நோயல் க்வின் வங்கியின் செலவுகளை குறைக்க அதிரடியான முயற்சியில் இறங்கி உள்ளார்.. இதன் காரணமாக சுமார் 10 ஆயிரம் பேரை வங்கியில் இருந்து வேலையை விட்டு நீக்க வங்கி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக அதிக அளவு ஊதியம் வாங்கும் பணியாளர்களை நீக்குவதற்கு எச்எஸ்பிசி வங்கி முடிவு செய்துள்ளது.
இந்த மாத இறுதியில் மூன்றாம் காலாண்டு முடிவுகளைப் வெளியிடும் போது எச்எஸ்பிசி சமீபத்திய செலவுக் குறைப்பு மற்றும் வேலை குறைப்பின் தொடக்கத்தை அறிவிக்கக்கூடும் என்று ஆங்கில நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனா அமெரிக்கா இடையிலான வர்த்தக போர், ஹாங்காங்கில் நடந்து வரும் போராட்டங்கள், பிரெக்ஸிட் ஒப்பந்தம் உள்ளிட்ட பிரச்னைகளால் எச்எஸ்பிசி வங்கி பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே எச்எஸ்பிசி வங்கி ஆட்குறைப்பு விவகாரம் தொடர்பாக வெளியாகும் செய்திகளுக்கு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.