அமெரிக்க இனக் கலவர போராட்ட செய்தி சேகரித்த 2 நிருபர்கள் அதிரடி கைது
பெர்குசன், அமெரிக்கா: அமெரிக்காவை உலுக்கி வரும் இனக் கலவரம் தொடர்பான போராட்டங்களை செய்தி சேகரித்த இரண்டு செய்தியாளர்களை அமெரிக்க போலீஸார் கைது செய்தனர்.
வாஷிங்டன் போஸ்ட் இதழின் வெஸ்லி லோரி, ஹப்பிங்டன் போஸ்ட் இதழின் ரியான் ரெய்லி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மிசெளரி மாகாணத்தின் பெர்குசன் நகரில் நடந்து வந்த கருப்பர் இனத்தவரின் போராட்டங்களை செய்தியாக சேகரித்தபோது இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
ஆனால் விசாரணைக்குப் பின்னர் இரு செய்தியாளர்களும் விடுவிக்கப்பட்டு விட்டனர். இவர்களின் கைது அமெரிக்க ஊடகங்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மைக்கேல் பிரவுன் என்ற 18 வயது கருப்பர் இன வாலிபரை, வெள்ளையர் இன அதிகாரி ஒருவர் சரமாரியாக சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து அமெரிக்காவில் இனக் கலவரம் வெடித்துள்ளது. கருப்பர் இனத்தவர் செயின்ட் லூயிஸ், பெர்குசன் ஆகிய நகரங்களில் போராட்டங்களில் குதித்துள்ளனர். கலவரத்தில் பல வர்த்தக நிறுவனங்கள் கடுமையான தாக்குதலுக்குள்ளாகியுள்ளன. பதட்டம் நீடிக்கிறது.
இந்த நிலையில்தான் போராட்ட செய்தியை சேகரித்த இரு செய்தியாளர்களை போலீஸார் கைது செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
போலீஸார் தங்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாகவும், தாக்கியதாகவும் செய்தியாளர் ரெய்லி கூறியுள்ளார். அவர் கூறுகையில் என்னைக் கைது செய்த அதிகாரி எனது பொருட்கள், கேமராவை ஒரு பையில் வேகமாகப் போட்டு திணித்தார். அவரிடம் உங்களது பெயர் என்ன என்று கேட்டபோது அவர் பதில் சொல்லவில்லை. மாறாக எனது கழுத்தில் விரலை வைத்து மிரட்டுவது போல பேசினார்.
போலீஸார் போலவே அவர்கள் செயல்படவில்லை. ராணுவத்தினர் போல நடந்து கொண்டனர். இது மிகவும் கொடுமையானது. மேலும், எங்களை ஒரு மெக்டொனால்ட்ஸ் கடைக்குள் கூட்டிச் சென்று அதிகாரிகள் தாக்கினர். எங்களது அடையாளத்தைக் காட்டிய பிறகே தாக்குதலை நிறுத்தினர். பின்னர் மன்னிப்பு கேட்டனர் என்றார்.
அடையாள அட்டையை போலீஸ் அதிகாரிகள் கேட்டபோது அதைக் கொடுக்கத் தவறியதால்தான் இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.