குரானுக்கு தீ வைத்த வலதுசாரி அரசியல்வாதி.. கொதித்தெழுந்த இஸ்லாமியர்கள்.. ஸ்வீடன் நாட்டில் கலவரம்!
ஸ்டாக்ஹோம்: ஸ்வீடன் நாட்டில் நடந்த குரான் எரிப்பு பேரணிக்கு எதிராக அங்கு பெரிய கலவரம் ஏற்பட்டுள்ளது. டென்மார்க்கை சேர்ந்த ராஸ்மஸ் பலுடான் தொடங்கிய இந்த குரான் எரிப்பு பிரச்சாரம் காரணமாக தற்போது தெற்கு ஸ்வீடன் மொத்தமாக பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது .
கடந்த 5 வருடங்களுக்கு முன்பு வரை, பெரும்பாலான ஐரோப்பா நாடுகள் இடதுசாரி கொள்கை கொண்ட நாடுகளாகவே இருந்தது. ஆனால் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக ஸ்வீடன், டென்மார்க் உள்ளிட்ட நாடுகளில் வலதுசாரி கொள்கைகள் வலிமைபெற தொடங்கி உள்ளது.
உலகம் முழுக்க வலதுசாரி கொள்கைகள் வலிமை அடைய தொடங்கி உள்ள நிலையில் ஸ்வீடன் நாட்டிலும் இந்த கொள்கை கொண்ட அரசியல்வாதிகள் மக்கள் ஆதரவை பெற தொடங்கி உள்ளனர். அதிலும் ஸ்வீடன் மற்றும் டென்மார்க் ஆகிய இரண்டு நாடுகளிலும் இஸ்லாமிய எதிர்ப்பு தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இ.எம்.ஐ. கட்ட மேலும் 6 மாதம் அவகாசம் நீட்டிக்க வேண்டும்.. ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு ஸ்டாலின் கோரிக்கை
கடும் இஸ்லாமிய எதிர்ப்பு
ஸ்வீடன் மற்றும் டென்மார்க் நாடுகளில் குடியேறும் மற்றும் பூர்வகுடிகளாக இருக்கும் இஸ்லாமியர்களுக்கு எதிராக தீவிரமான பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகிறது. இந்த கொள்கை கொண்ட அரசியல் தலைவர்கள் பலர் அங்கு மக்கள் ஆதரவை பெற்று வருகிறார்கள். டென்மார்க்கை சேர்ந்த இஸ்லாமிய எதிர்ப்பு அரசியல்வாதி ராஸ்மஸ் பலுடான் இதில் தீவிரமான நபராக பார்க்கப்படுகிறார். இவர் ஸ்டராம் குர்ஸ் என்ற வலதுசாரி கட்சியை சேர்ந்தவர்.
எப்படிப்பட்டவர்
இஸ்லாமியர்களுக்கு எதிராக ஐரோப்பா நாடுகளில் பிரச்சாரம் செய்வதே ராஸ்மஸ் வேலை. குரானை மாடியில் இருந்து கீழே போடுவது, குரானுக்கு தீ வைத்து கொளுத்துவது. மக்களிடம் குரானுக்கு எதிராக பிரச்சாரம் செய்வது. இஸ்லாமியர்களின் வீடுகளை, கட்டிடங்களை இடிப்பது என்று இவர் செய்யாத பிரச்சாரமே கிடையாது. இவர் யூ டியூபில் குரானை கொளுத்தி பல வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார்.
ஸ்வீடன் சென்றார்
இந்த நிலையில்தான் ராஸ்மஸ் ஸ்வீடன் நாட்டில் இதேபோல் குரான் எரிப்பு போராட்டம் செய்ய சென்று இருக்கிறார் . தனது ஆதரவாளர்கள் உடன் டென்மார்க்கில் இருந்து ஸ்வீடன் உள்ளே சென்று அங்கு குரானை எரிக்க திட்டமிட்டு இருக்கிறார். ஆனால் இவருக்கு ஸ்வீடன் உள்ளே செல்ல இரண்டு வருடம் தடை உள்ளது. இதனால் எல்லையில் போலீசார் இவரை அனுமதிக்கவில்லை.
வீடியோ வெளியிட்டார்
ஆனால் இவரின் ஆதரவாளர்கள் ஸ்வீடன் உள்ளே சென்று தீவிரமாக இஸ்லாமிய எதிர்ப்பு பேரணியை நடத்தி உள்ளனர். இதில் ராஸ்மஸ் ஆதரவாளர்கள் குரானை கொளுத்தியதாக கூறப்படுகிறது. அதேபோல் இவர்கள் குரானுக்கு தீ வைத்த வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதுதான் தற்போது ஸ்வீடன் நாட்டில் கலவரத்திற்கு காரணமாக மாறியுள்ளது.
கலவரம்
இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, ஸ்வீடன் நாட்டை சேர்ந்த இஸ்லாமியர்கள் அங்கு இருக்கும் மால்கோ பகுதியில் போராட்டத்தில் குதித்தனர். ராஸ்மஸ் ஆதரவாளர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறி போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியதை அடுத்து, பெரிய கலவரம் ஏற்பட்டது. நேற்று மதியம் ஏற்பட்ட கலவரம் தற்போது வரை நீடித்து வருகிறது.
எத்தனை பேர்
கிட்டத்தட்ட 300 பேர் இந்த கலவரத்தில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது. இங்கு 20க்கும் மேற்பட்ட கார்கள், பைக்குகள் தீ வைக்கப்பட்டது. கலவரம் இன்னும் தீவிரமாக நடந்து வருகிறது. பல்வேறு கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டு உள்ளது. இதுவரை கலவரத்தில் ஈடுப்பட்ட 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு 1500 போலீசார் வரை குவிக்கப்பட்டுள்ளனர்.கலவரம் காரணமாக அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.