இந்தோனேசியாவில் மக்களை அச்சுறுத்தி வந்த ராட்சத முதலை சுட்டுக் கொலை... வயிற்றில் கை, கால்கள் கண்டெடுப்பு
இந்தோனேசியாவில் ராட்சத முதலை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது.
ஜகார்த்தா: இந்தோனேசியாவில் ராட்சத முதலை ஒன்றின் வயிற்றில் இருந்து மனிதக் கை, கால்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அங்குள்ள மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தோனேஷியாவின் போர்னியோ பகுதியில் உள்ள மருகன்ஹளில் ஓடும் ஆற்றில் கடந்த சில நாட்களாக ராட்சத முதலை ஒன்று மக்களை அச்சுறுத்தி வந்தது. இதனால் அந்த ஆற்றிற்கு செல்லவே மக்கள் பயந்து வந்தனர். இது தொடர்பாக தகவல் அறிந்த வனத்துறையினர் முதலையைப் பிடிக்க முயற்சி மேற்கொண்டனர்.
அதன் தொடர்ச்சியாக ஆற்றின் மேற்பரப்பில் வந்த முதலையை அவர்கள் சுட்டுக் கொன்றனர். 20 அடி நீளம் இருந்த அந்த முதலையின் வயிற்றை ஆய்வு செய்ததில், அதில் மனித கை, கால்கள் இருந்தது கண்டு மக்களும், அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆற்றங்கரையோரம் ஆண்டிஏராங்க் என்ற இளைஞரின் இருசக்கர வாகனமும், அவரது செருப்பும் கேட்பாரற்றுக் கிடந்தது. பின்னர் கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் அவர் ஆற்றின் வேறொரு பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.
தற்போது முதலையில் வயிற்றில் கிடைத்துள்ள கை, கால்கள் அவருடையதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. ஆற்றில் குளிக்கச் சென்ற அந்த இளைஞரைக் கடித்துக் கொன்று, அவரின் கை, கால்களை முதலை விழுங்கியுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
கடந்த சில நாட்களாக பயமுறுத்தி வந்த முதலை கொல்லப்பட்டதால், அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்தோனேசியத் தீவுகளில் உள்ள வனப்பகுதிகளில் இது போன்ற முதலைகள் ஏராளம். கரையோரம் வரும் இவை அடிக்கடி மனிதர்கள் மீது தாக்குதல் நடத்துவது அப்பகுதிகளில் வாடிக்கையாக உள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று சுமத்ரா தீவில் 66 வயது பெண் ஒருவரை ராட்சத முதலை ஒன்று கடித்துக் கொன்றது. இதேபோல், கடந்த 2016ம் ஆண்டு ரஷ்ய சுற்றுலாப்பயணி ஒருவர் ராஜா அம்பாட் தீவில் முதலையால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.