ஆண்களால் கொடூரமாய் அடித்துக் கொல்லப்பட்ட ஆப்கன் பெண் – எடுத்துச் சென்று அடக்கம் செய்த பெண்கள்
காபூல்: ஆப்கானிஸ்தானில் ஆண்களால் அடித்து, உதைத்துக் கொடூரமாகக் கொல்லப்பட்ட பெண்ணின் உடலை அந்நாட்டு பெண்கள் கூடி எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்துள்ளனர். அவருடைய சவப்பெட்டியினை பெண்களே எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஒரு இளம்பெண்ணை நகரின் மையப்பகுதிக்கு இழுத்து வந்த கும்பல் ஒன்று தரையில் தள்ளி பயங்கரமாக உதைத்தும், காலால் மிதித்தும் தாக்கியது. சிலர் தடியால் தாக்கினர். இதில் அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அப்படியும் ஆத்திரம் தீராத அக்கும்பல் அவரது உடலை அருகில் இருந்த ஆற்றுக்கு எடுத்து சென்று தீயிட்டு எரித்துள்ளது. பின்னர் உடலை ஆற்றின் சகதியில் போட்டுள்ளனர். இந்த கொடூரத்தை பலர் தங்கள் செல்போனில் படம் எடுத்துள்ளனர். தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்து பெண்ணின் உடலை மீட்டனர்.
கொல்லப்பட்ட அந்த இளம்பெண், இஸ்லாமியர்களின் புனித நூலான குர் ஆன் பிரதியை தீயிட்டு எரித்ததாக கூறி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில வருடங்களாக தங்களின் மகள் மனம் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கொலையை கண்டித்திருந்த ஆப்கானிஸ்தான் அதிபர் அஸ்ரப் கானி, அதுபற்றிய விசாரணைக்கும் உத்தரவிட்டிருந்தார். இந்த கொலை தொடர்பாக 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் குர் ஆன் பிரதிகளை எரித்ததாக குற்றம்சாட்டப்பட்டு அடித்துக் கொலைசெய்யப்பட்ட பெண் உண்மையில் ஓர் அப்பாவி என்று அந்நாட்டின் குற்றவியல் வழக்குகளுக்கான மூத்த விசாரணையாளர் கூறுகின்றார்.
பர்குந்தா என்ற அந்தப் பெண்ணின் இறுதிச் சடங்கில் நூற்றுக்கணக்கானோர் கலந்துக்கொண்டிருந்தனர். அவரது பிரேதப் பெட்டியை பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்கள் சுமந்துசென்றனர்.
ஆப்கானிஸ்தானில் செயல்படும் மனித உரிமை அமைப்புகள், மகளிர் நல அமைப்புகள் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மகளிர் நல அமைப்புகளின் ஏற்பாட்டின்பேரில் காபூலில் ஞாயிற்றுக்கிழமை பர்குந்தாவின் இறுதிச் சடங்கு நடைபெற்றது. அதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பர்குந்தாவின் உடலை பெண்களே சுமந்து சென்று அடக்கம் செய்தனர்.