லிபியாவில் அகதிகளை ஏற்றிச் சென்ற 2 படகுகள் கடலில் கவிழ்ந்து விபத்து: 240 பேர் பலி
இத்தாலி அருகே அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 240 பேர் பலியாகினர்.
லிபியா: லிபியாவில் இருந்து இத்தாலிக்கு அகதிகளாக சென்ற 280க்கும் மேற்பட்டோர் சென்ற 2 படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 240 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக 31 பேர் உயிர்தப்பி கரை சேர்ந்துள்ளனர்.
லிபியாவில் நடந்து வரும் உள்நாட்டு போர் மற்றும் அரசியல் நெருக்கடி ஆகியவற்றால் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் சட்டவிரோதமாக குடிபெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். உள்நாட்டு போர் காரணமாகவும் துருக்கி, சிரியா போன்ற நாடுகளில் நடைபெற்று வரும் சண்டை காரணமாகவும் பொதுமக்கள் லிபியா வந்தடைகிறார்கள்.
அங்கிருந்து சமூக விரோதிகள் மூலமாக ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக கடல்வழியாக பாதுகாப்பற்ற பயணமாக அவர்களை படகுகளில் ஏற்றிச் செல்கிறார்கள். அதில் பல முறை படகுகள் நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் லிபியாவில் இருந்து இத்தாலிக்கு ஒரு படகில் 100-க்கும் மேற்பட்ட அகதிகள் பயணம் செய்துள்ளனர். இந்தப் படகு இத்தாலியின் லம்பேடுசா தீவு அருகே நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 39 பேர் தப்பித்து லம்பேடுசா தீவை அடைந்துள்ளனர். நேற்று காலை மேலும் ஒரு படகு கவிழ்ந்துள்ளது. இதில் 140 பேர் மூழ்கி பலியாகியுள்ளனர். இரண்டு பேர் மட்டுமே தப்பித்துள்ளது.
இந்த தகவலை இத்தாலிக்கான ஐ.நா. அகதிகளுக்கான ஏஜென்சி உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் லிபியாவில் இருந்து ஐரோப்பாவுக்கு கிளம்பிய படகுகள் விபத்துக்குள்ளானதில் இதுவரை 4 ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.