லிபியா அருகே மீண்டும் துயரம்... அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து 700 பேர் பலி
ரோம்: இத்தாலி அருகே அகதிகள் சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததில், அதில் பயணம் செய்த 700க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பயங்கரவாதிகள் கையில் சிக்கி தவிக்கும் லிபியாவில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள், அகதிகளாக படகுகள் மூலம் ஆபத்தான முறையில் ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பி வருகின்றனர். அவ்வாறு சட்டவிரோதமாக தப்பி வருபவர்கள் பயணம் செய்யும் படகுகள் அவ்வப்போது விபத்துக்களில் சிக்குவது அதிகரித்து வருகிறது.
கடந்த வாரத்தில் கூட, அகதிகள் வந்த படகு ஒன்று விபத்தில் சிக்கி 400 பேர் பலியானார்கள். இந்நிலையில், இன்று லிபிய படகு ஒன்று இத்தாலி அருகே கவிழ்ந்து விபத்தில் சிக்கியுள்ளது.
இந்தப் படகில் 700க்கும் அதிகமான அகதிகள் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இவர்களில் 28 பேர் மட்டும் உயிரோடு மீட்கப்பட்டுள்ளதாக இத்தாலிக்கான அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பின் தலைவர் லாரன்ஸ் ஜோல்ஸ் தெரிவித்துள்ளார். எனவே, இந்த விபத்தில் 700க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்புப் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
லேம்பேடுசா என்ற இடம் நோக்கி இப்படகு போய்க் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.