புரட்டிப் போட்ட 'ஹார்வே’ புயல்... டெக்சாஸில் பெட்ரோல் தட்டுப்பாடு!
ஹூஸ்டன்(யு.எஸ்): ஹார்வே புயல் ஹூஸ்டனை புரட்டிப் போட்டுள்ளது. நகரம் முற்றிலும் செயலிழந்து விட்டது. முதல் கட்ட கணக்கெடுப்பு படி, 100 பில்லியன் டாலர்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் பெட்ரோலியத் தலைநகரான ஹூஸ்டனில் உள்ள எண்ணெய் சுத்தகரிப்பு நிலையங்கள்தான், டெக்சாஸ் முழுவதுக்கும் பெட்ரோல், டீசல் சப்ளை செய்கிறது.
சில சாலைகளில், சிக்னல் கம்பம் உயரத்திற்கு, சின்கல் விளக்குகளைத் தொட்டுக்கொண்டு, வெள்ள நீர் பாய்ந்தோடியது. சாலைகள் ஆறுகளாக மாறிவிட்டன. எண்ணெய் சுத்தகரிப்பு நிலையங்கள் முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டன. சில சுத்தகரிப்பு ஆலைகளில் பெட்ரோலுடன், வெள்ளத் தண்ணீர் கலந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
ஹூஸ்டன் சப்ளை இல்லை என்பதால், டெக்சாஸ் முழுவதும் உள்ள பெட்ரோல் பம்புகளுக்கு சரக்கு வரத்தும் நின்று விட்டது. வடக்குப் பகுதியான டல்லாஸ் நகரில், கடந்த மூன்று நாட்களாக ஹூஸ்டன் புயலின் எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்தது.
புதன்கிழமை மதியம் முதல், பெட்ரோல் தட்டுப்பாடு என்ற பரபரப்பு அனைவரிடம் தொற்றிக்கொண்டது. நீண்ட வரிசையில் நின்று பெட்ரோல் போட்டுச் சென்றனர். இன்னும் பலர் , பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் என்ற சிந்தனையே இல்லாதவர்களாக இருந்தனர்.
நண்பர்களுக்குள் வாட்ஸ் அப், தொலைபேசி மூலம் தகவல்கள் பறந்ததும், தூங்கியவர்கள் கூட, அப்படியே வேறு உடை மாற்றாமல், இரவு உடையிலேயே பெட்ரோல் பங்குகளுக்கு வந்திருந்தார்கள். சாதாரண பெட்ரோல் விற்றுத் தீர்ந்து ப்ரீமியம் மட்டுமே சில இடங்களில் கிடைக்கிறது.
பல பங்குகள் மூடப்பட்டு விட்டன. நகருக்கு வெளியே உள்ள சிற்றூர்களுக்கு சென்றும் பெட்ரோல் போட்டு விட்டு வந்து கொண்டிருக்கிறார்கள். பெட்ரோல் தட்டுப்பாடு என்பதால், பால், பிரெட் உள்ளிட்ட அத்தியாவசப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. இரவிலும் வால்மார்ட்டில் கூட்டம் களைகட்டுகிறது. அத்தியாவசப் பொருட்கள் விற்றுத் தீர்கின்றன.
சில பெட்ரோல் பங்குகளுக்கு சென்று, ஊழியர்களிடம் நிலைமை எப்போது சரியாகும் என்று கேட்டோம். ஹூஸ்டன் பெட்ரோல் வருவதற்கு இன்னும் ஒரு வாரம் கூட ஆகலாம். அதுவரையிலும் பக்கத்து மாநிலங்களிலிருந்து வாங்குவதற்கு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. நிச்சயம் விலை கூடுதலாக இருக்கும். வேறு இடத்தில், இது எப்போது சரியாகும் என்று சொல்ல முடியவில்லை என்றார்.
வியாழக்கிழமை பல பங்க்குகளில் பெட்ரோல் விற்று தீர்ந்துவிட்டது. இருக்கும் பங்க்குகளில் நீண்ட வரிசையில் கார்கள் நின்று கொண்டிருக்கின்றன. சாலையிலும் கார் வரிசை தொடர்கிறது. சராசரியாக 20 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது.
பெட்ரோல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பதாக தெரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெக்சாஸ் சட்டத்தை குறிப்பிட்டு, அனைத்து நகராட்சிகளும் சுற்றறிக்கை, ஃபேஸ்புக், ட்விட்டுகள் மூலம் தெரியப்படுத்தி வருகின்றன. அதுவும் முதியவர்களிடம் கூடுதலாக வசூலித்தால் தண்டனை பல மடங்கு அதிகம் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.
முதலில், ஹூஸ்டன் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பு தேவைக்கு, பெட்ரோல் இருப்பு திருப்பி விடப்படுகிறது. மற்ற இடங்களில் சில நாட்களுக்கு பெட்ரோல் தட்டுப்பாடு இருக்கும் என்று கூறப்படுகிறது.
வரலாறு காணாத ஹூஸ்டன் வெள்ளம், டெக்சாஸ் முழுவதற்கும் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
- இர தினகர்