புளோரிடா மாகாணத்தை நடுங்க வைக்கும் இர்மா புயல்... பீதியில் இடம் மாறும் 55 லட்சம் பேர்
புளோரிடா மாகாணத்தை இர்மா புயல் தாக்கும் என்பதால் 55 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.
புளோரிடா: அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான இர்மா புயல் புளோரிடா மாகாணத்தைத் தாக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக 55 லட்சம் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
புவி வெப்பமயமாதலைத் தொடர்ந்து உலகின் பருவ நிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதன் காரணமாக புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் பெரும் அழிவை உண்டாக்கி வருகின்றன.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அட்லாண்டிக் பெருங்கடலைல் உருவானது இர்மா புயல். இர்மா புயல் இந்த நூற்றாண்டின் பெரும் புயல் என வானிலை அறிஞர்கள் கூறுகின்றனர். பலத்த மழையையும் 290 கி.மீ வேகத்துக்கு புயல் காற்றையும் கொண்டு இந்தப் புயல் கரீபியன் தீவுப் பகுதிகளில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இப்புயல் போர்டோ ரிகா, கியூபா, விர்ஜின் தீவுகள் உள்ளீட்ட நாடுகலில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தி மக்களை பீதிக்குள்ளாக்கியுள்ளது. தற்போது மெல்ல மெல்ல அமெரிக்காவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் இப்புயல், இந்திய நேரப்படி இன்று காலை புளோரிடா மாகாணத்தை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதனால், புளோரிடா மாகாணத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கியாக இதுவரை 55 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும், அங்குள்ள பேரிடர் மேலாண்மை குழுவும் ராணுவமும் மீட்பு பணிக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், புளோரிடா மாகாண ஆளுநர் ரிக் ஸ்காட் மக்களை உடனடியாக வெளியேற அறிவுறுத்தியுள்ளார்.