மத்திய அமெரிக்காவை புரட்டிப் போட்ட நேட் புயல்... மிஸிசிப்பியில் 2 முறை நிலச்சரிவு #HurricaneNate
அமெரிக்காவில் நேட் புயல் அச்சுறுத்தி வருகிறது. மத்திய அமெரிக்காவில் நேட் புயல் ஏராளமான உயிரிழப்பை ஏற்படுத்திவிட்டது.
நியூ ஆர்லியன்ஸ்: அமெரிக்காவில் மிஸிசிப்பி அருகே நேட் புயல் மையம் கொண்டுள்ளதால் கனமழை பெய்து சனிக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது.
மத்திய அமெரிக்காவில் நேட் புயல் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை தாக்கியது. இதனால் கனமழைக்கு 31 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் பலரை காணவில்லை.
இதனால் மத்திய அமெரிக்க பகுதிகள் வெள்ளக் காடாக காட்சி அளித்தன. இந்த புயல் மிஸிசிப்பி கடற்கரையோரம் மையம் கொண்டதால் கனமழை கொட்டித் தீர்த்தது. இம்மழையால் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது.
140 கி.மீ. தூரம்
லூசியானா, மிஸிசிப்பி, அலாபாமா, ப்ளோரிடா உள்ளிட்ட பகுதிகளில் கடல் அலைகள் உயரமாக வீசக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டு அப்பகுதி மக்கள் வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் காற்று வீசுகிறது.
மீண்டும் நிலச்சரிவு
இந்த புயலானது மிஸிசிப்பி பகுதியில் இரண்டாவது முறையாக மீண்டும் நிலச்சரிவை ஏற்படுத்தியது. இதனால் நிகாராகுவா, கோஸ்டா ரிக்கா, ஹோண்டுராவில் 25 பேர் உயிரிழந்துவிட்டனர்.
வேகமாக நகர்கிறது
இந்த நேட் புயலானது அமெரிக்காவின் தெற்கு பகுதி நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. அமெரிக்காவின் முக்கிய பகுதிகளை புரட்டிபோட்ட மரியா மற்றும் இர்மா புயல் அளவுக்கு வலுவானது இல்லை என்றால் இது வேகமாக நகர்ந்து வருவதால் தாழ்வான இடங்களில் வெள்ளநீர் சூழும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் அறிவுறுத்தல்
நேட் புயலினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள அரசு நிர்வாகத்தினரும், மீட்புக் குழுவினரும் தயார் நிலையில் இருக்குமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார். மேலும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இந்த அடைமழையால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறிவிட்டனர். ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்து விட்டன. பாலங்கள் சேதமடைந்து சாலைகள் ஆறுகளாக காட்சியளிக்கின்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.