35 மில்லியன் பவுண்ட் ஆச்சே.. பாகிஸ்தானுக்கு மூக்குடைப்பு.. பிரிட்டன் கோர்ட்டில் இந்தியாவுக்கு வெற்றி
லண்டன்: 1948 ஆம் ஆண்டு ஹைதராபாத் நிஜாம், பாகிஸ்தானின் துணை தூதருக்கு, பாதுகாப்பாக வைத்திருக்க அனுப்பிய 1 மில்லியன் பவுண்ட் தொகைக்கு, உரிமை கோரிய பாகிஸ்தானின் கோரிக்கையை பிரிட்டிஷ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்தியா சுதந்திரம் பெற்றதும், பல சமஸ்தானங்கள் இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளிலும் இணைந்தன. 1948ம் ஆண்டுவாக்கில், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, ஹைதராபாத்தின் ஏழாவது நிஜாம், மிர் ஒஸ்மான் அலிகான், இந்தியா அல்லது பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் சேர மறுத்துவிட்டார்.
ஆனால், இந்திய படைகளுக்கு பயந்து, 1 மில்லியன் பவுண்டுகளுக்கு மேலான தொகையை, பாகிஸ்தான் துணை தூதர் ஹபீப் இப்ராஹிம் ரஹிம்தூலாவின் லண்டன் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார். பாதுகாப்பாக இந்த தொகையை வைத்திருக்க அவர் கோரிக்கைவிடுத்தார்.
இந்த நிலையில்தான், நிஜாம் மிர் ஒஸ்மான் அலிகானின் சந்ததியினர், ஹைதராபாத்தின் எட்டாவது நிஜாம் என்ற பட்டப்பெயர் கொண்ட, முகர்ரம் ஜா மற்றும் அவரது தம்பி முஃபாக்கம் ஜா ஆகியோர் பாகிஸ்தானுக்கு எதிரான சட்டப் போராட்டத்தில் குதித்தனர். அவர்களுக்கு இந்திய அரசு உதவி செய்தது.
லண்டன் ராயல்நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. நீதிபதி மார்கஸ் ஸ்மித் இன்று அளித்த தீர்ப்பில், "நிஜாம் VII (அதாவது, மிர் ஒஸ்மான் அலிகான்) வாரிசுகளுக்கு பணத்திற்கான உரிமை உண்டு" என்று தெரிவித்தார்.
1948 ஆம் ஆண்டில் ஹைதராபாத் இணைக்கப்படுவதற்கு முன்னர் நிஜாமிற்கு வழங்கப்பட்ட ஆயுதங்களுக்கு ஈடுசெய்ய பணம் மாற்றப்பட்டதால், இந்த நிதி எங்களுக்கு சொந்தமானது என்று 2013ல் பாகிஸ்தான் அரசு கூறியது. இந்தியாவின் வசம் இந்த நிதி போகக்கூடாது என்றுதான், எங்களுக்கு அனுப்பப்பட்டது என்றும், பாகிஸ்தான் வாதிடடது.
ஆனால், நாட்வெஸ்ட் வங்கியில் உள்ள இந்த பணம் ஆயுதங்களுக்குப் பதிலாக வழங்கப்பட்டது என பாகிஸ்தான் கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் சட்டவிரோதமாக இணைக்கப்பட்டுள்ளது என்ற பாகிஸ்தானின் வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது. இந்த தீர்ப்பை விரிவாக ஆராய்ந்த பின்னர், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக, இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
நிஜாம் அனுப்பிய தொகை சுமார் 1 மில்லியன் பவுண்ட் என்றாலும், அது தற்போது வளர்ந்து 35 மில்லியன் பவுண்ட்டாக மாறியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.