கிரிக்கெட் என்று வந்து விட்டால் பாகிஸ்தான்தான் வெல்ல வேண்டும்.. மண் பாசம் மாறாமல் பேசும் மலாலா
லண்டன்: இந்தியா, பாகிஸ்தானிற்கு இடையே நல்லுறவு நிலவ வேண்டும் என்றாலும் கூட, கிரிக்கெட் என்று வந்துவிட்டால் இந்தியாவை பாகிஸ்தான் எப்போதுமே வெல்ல வேண்டும் என்பது தான் தனது விருப்பம் என அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் பெண் கல்வியை முன்னிறுத்திப் போராடியதால் தாலிபன்களால் கொடூரமாகத் தாக்குதலுக்கு உள்ளானவர் பள்ளிச் சிறுமியான மலாலா. சிகிச்சைக்காக லண்டன் சென்ற மலாலா, தற்போது குடும்பத்துடன் அங்கேயே தங்கி கல்வி கற்று வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார் மலாலா. அதில் அவர் கூறியதாவது:-
சமூகசேவை...
எதிர்காலத்தில் தாய்நாடான பாகிஸ்தானுக்கு சென்று, அங்கு சமூகச்சேவை ஆற்ற வேண்டும் என்பதே என் ஆசை.
இந்தியாவின் ஆதரவு...
தாலிபான்களின் கொலைவெறி தாக்குதலில் நான் உயிருக்கு போராடிய வேளையில் இந்திய மக்கள் என்மீது காட்டிய அன்பு என்னை வியக்க வைத்தது.
இந்தியாவுக்குச் செல்ல விருப்பம்...
இந்தியாவுக்கும் சென்று டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் பெண்கல்விக்கு ஆதரவாக பிரசாரம் செய்து, இளம்பெண்களை ஊக்கப்படுத்த விரும்புகிறேன்.
கிரிக்கெட்டில்...
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் நல்லுறவு நிலவ வேண்டும் என ஆசைப்படுகிறேன். அதேவேளையில், இருநாடுகளுக்கும் இடையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் எப்போதுமே இந்தியாவை பாகிஸ்தான் வெல்ல வேண்டும் என்பதே என் விருப்பம்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நோபல் பரிசு...
கடந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசை இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்தியுடன் சேர்ந்து மலாலா பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.