பாப் இசையில் பெண்களை சித்தரிக்கும் விதம்... மலாலா கோபம்
லண்டன்: பாப் இசையில் பெண்கள் பாலியல் ரீதியான பொருளாக சித்தரிக்கப்படுவதாக பாகிஸ்தான் சிறுமி மலாலா குற்றம் சாட்டியுள்ளார்.
பாகிஸ்தான் பெண்களின் கல்விக்காக போராடி தாலிபான் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு ஆளானவர் மலாலா. உயிருக்கு ஆபத்தான நிலையில் குண்டடி பெற்று தற்போது மறுபிறவி எடுத்து இங்கிலாந்தில் வாழ்ந்து வருகிறார்.
மலாலா தன் சுயசரிதையை புத்தகமாக வெளியிட்டுள்ளார். மலாலாவின் துணிச்சல் மிக்க செயலை பாராட்டி, அவரை கவுரவிக்கும் வகையில், நவம்பர் 10ம் தேதி மலாலா தினமாகக் கொண்டாடப்படும் என ஐ.நா., அறிவித்தது.
இந்நிலையில், தற்போது பாப் இசையில் பாலியல் தாக்குதல்கள் அதிகமாக உள்ளதாகவும், அவை பெண்களை ஒரு போகப் பொருளைப் போல சித்தரிப்பதாகவும் குற்றம்சாட்டி உள்ளார் மலாலா.
இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் மலாலா கூறியிருப்பதாவது :-
புரியவில்லை...
பாப் இசைப் பாடல்களின் அர்த்தம் எனக்குப் புரிவதில்லை. ஆனால், மற்றவர்களின் உதவியோடு அத்தகைய பாடல்களை நான் மொழி பெயர்த்துக் கொள்கிறேன்.
பெண்களின் சித்தரிப்பு...
பாப் இசைப் பாடல்கள் எதை குறிக்கின்றன? அவை பெண்களை ஒரு பொருட்கள் போல் சித்தரிப்பதாக எனக்குத் தோன்றுகிறது' எனத் தெரிவித்தார்.
அதிர்ச்சி...
மேலும், பாகிஸ்தானில் பெண்கள் பிறப்புறுப்பு சிதைப்பு குறித்து கேள்விப்பட்டு தான் மிகவும் அதிர்ச்சி அடைந்ததாகவும், அது தனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என்றும் மலாலா கூறினார்.
கடிதம்...
இப்பேட்டியின் போது பிரபல பாப் பாடகி மிலி சைரஸுக்கு மூத்த பாடகர் செனட் ஓ கென்னர் எழுதிய கடிதத்தையும் அவர் முன்னுதாரணமாகக் காட்டினார். அக்கடிதத்தில் சைரசின் அருவருக்கத்தக்க மேடை நடவடிக்கைகள் குறித்து கென்னர் சுட்டிக் காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.