சிபிஐ ரெய்டை தொடர்ந்து திடீர் வெளிநாடு பயணம் ஏன்? லண்டனில் இருந்தபடி கார்த்தி சிதம்பரம் விளக்கம்
லண்டன்: சிபிஐ ரெய்டுக்கு பயந்து வெளிநாடுக்கு தப்பியோடவில்லை என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
அமலாக்க இயக்குனரகத்தால் பண மோசடி நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவுக்கு ஆளாகியுள்ளார் கார்த்தி சிதம்பரம். முன்னதாக சிபிஐ அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நாள் முழுக்க ரெய்டுகளை நடத்தியிருந்தது. இந்த நிலையில், கார்த்தி சிதம்பரம் திடீரென நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்.
அவர், கடனாளி தொழிலதிபர், விஜய் மல்லையாவைப் போல் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார் என்ற சர்ச்சைகள் ஆங்கில ஊடகங்களில் கிளம்பின. இதுகுறித்து லண்டனில் உள்ள கார்த்தியை தொலைபேசியில் தொடர்புகொண்ட பல டிவி சேனல்கள் கேள்வி எழுப்பின.
டிவி சேனல்களின் கேள்விகளுக்கு, தான் அடிக்கடி வெளிநாட்டுக்கு பறக்க கூடிய ஒரு தொழிலதிபர் என்ற கேடயத்தை பயன்படுத்தினார் கார்த்தி சிதம்பரம்.
"இது ஒரு முன்-திட்டமிட்ட பயணம், நான் ஏன் ஒரு திட்டமிடப்பட்ட பயணத்தை ரத்து செய்ய வேண்டும்," என்று கார்த்தி சிதம்பரம் லண்டனிலிருந்தபடி நிருபர்கள் கேள்விகளுக்கு பதில் கேள்வி கேட்டார். தான் அடிக்கடி பயணிப்பவர் என்றும், திட்டமிடப்பட்ட பயணத்தை ரத்து செய்ய எந்த காரணமும் இல்லை என்றும் கூறினார்.
கார்த்தி சிதம்பரம் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுத்து நிறுத்த எந்தவிதமான அவசியமும் கிடையாது. ஏனெனில், லுக்அவுட் எனப்படும் எந்த ஒரு நோட்டீசையும் சிபிஐ வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.