பாகிஸ்தானின் எதிர்காலத்திற்காக சிறை செல்கிறேன்.. நவாஸ் ஷெரீப் உருக்கம்
அபுதாபி: பாகிஸ்தானின் எதிர்காலத்திற்காக நான் தியாகம் செய்கிறேன் என்று, அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
பனாமா பேப்பர் ஊழல் வழக்கிற்காக 10 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ள நவாஸ் ஷெரீப், லண்டனில் இருந்து அபுதாபி வழியாக பாகிஸ்தானின் லாகூருக்ககு விமானத்தில் வந்தார்.
முன்னதாக நவாஸ் ஷெரீப் கூறுகையில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளதும், நான் நேரடியாக சிறைக்குத்தான் அழைத்துச் செல்லப்படுவேன் என்பதும் எனக்கு தெரியும். நான் இந்த தியாகத்தை பாகிஸ்தான் மக்களுக்காகத்தான் செய்கிறேன். ஒவ்வொருவரும் எனது பாதையை பின்பற்றினால், பாகிஸ்தானின் விதியை மாற்றலாம். இந்த வாய்ப்பு மீண்டும் வராது.
பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் மீது இனி மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும். அதன் ரிசல்ட் மீதும்தான் மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்? என்று கேட்டுள்ளார் நவாஸ் ஷெரீப்.
என் கண்முன்னால் சிறை கம்பிகள் தெரிகின்றன என்றபோதிலும் கூட நான் பாகிஸ்தான் செல்லப்போகிறேன் என்று இவ்வாரத்தின் துவக்கத்தில் பிரிட்டனில் நிருபர்களிடம் தெரிவித்திருந்தார் நவாஸ் ஷெரீப்.
#WATCH Former Pakistani PM Nawaz Sharif speaks to the media at Abu Dhabi airport, says, "I am coming back for the future generations of Pakistan. Mein karz chukane aa raha hun jo mujh par wajib hai." pic.twitter.com/fdFDVzgmxr
— ANI (@ANI) July 13, 2018
பாகிஸ்தானில் வரும் 25ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நவாஸ் ஷெரீப் சிறை செல்வது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே லாகூரில் 10000 போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சி தலைவர்கள் பலரையும் முன்னெச்சரிக்கையாக போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் இவர்களால் தேர்தல் களப்பணி செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது.