தாவூத்துக்கு பயந்து போலீசில் சரணடையவில்லை.. இந்தியா செல்ல விரும்புகிறேன்: சோட்டா ராஜன் பேட்டி
ஜகார்த்தா: தாவூத் இப்ராஹிமுக்கு பயந்துகொண்டு போலீசில் சரணடையவில்லை என்று நிழலுலக தாதா சோட்டா ராஜன் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் ஜிம்பாப்வேக்கு அழைத்து செல்லுமாறு தான் போலீசாரிடம் கூறவில்லை எனவும், இந்தியா செல்லவே விரும்புவதாகவும் சோட்டா ராஜன் தெரிவித்தார்.
இந்தோனேஷியாவின் பாலி தீவு பகுதியில் இந்தியாவால் 20 வருடங்களாக தேடப்பட்டு வரும் நிழலுலக தாதா இன்டர்போல் போலீசாரால் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
எதிராளியான தாவூத் இப்ராஹிம் ஆட்கள், ராஜனை கொலை செய்ய நெருங்கிவிட்டதை அறிந்தே, போலீசில் ராஜன் சரணடைந்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்தியாவில் பாதுகாப்பில்லை என்றும், ஜிம்பாப்வே சிறையில் அடைக்குமாறும் சோட்டா ராஜன் இந்தோனேஷிய போலீசாரிடம் கூறியதாகவும் சில ஊடகங்களில் தகவல் வெளியாகியிருந்தது.
இத்தகவல்களை சோட்டா ராஜன் இன்று மறுத்துள்ளார். இந்தியாவில் இருந்து சோட்டா ராஜனை சந்திக்க சென்ற தொலைக்காட்சி நிருபர்களிடம் ராஜன் கூறுகையில், "நான் இந்தோனேஷியாவுக்கு சரணடைய வரவில்லை. பாலிக்கு வந்து இறங்கியதும் கூட நான் கைது செய்யப்படவில்லை. போலீசார் என்னை கண்டுபிடிக்க காலம் எடுத்துக்கொண்டனர்.
என்னை ஜிம்பாப்வேக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று பாலி போலீசாரிடம் நான் கோரிக்கைவிடுக்கவில்லை. இந்தியா வரவே விரும்புகிறேன். தாவூத் இப்ராஹிம் மீது எனக்கு எந்த பயமும் கிடையாது. இதுகுறித்து மேலும் விளக்கமாக இப்போது பேசவிரும்பவில்லை. இவ்வாறு சோட்டா ராஜன் தெரிவித்தார்.