உபேர் டாக்சி டிரைவரை தாக்கியதை நினைத்து வெட்கப்படுகிறேன்: டாக்டர் அஞ்சலி
மயாமி: அமெரிக்காவில் குடிபோதையில் உபேர் டாக்சி டிரைவரை தாக்கியதை நினைத்து வெட்கப்படுவதாக இந்திய வம்சாவளி மருத்துவர் அஞ்சலி ராம்கிசூன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மயாமி நகரில் டாக்டராக உள்ளவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஞ்சலி ராம்கிசூன்(30). அவர் குடிபோதையில் உபேர் டாக்சி டிரைவரை தாக்கியுள்ளார். அந்த சம்பவம் நடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இது குறித்து அஞ்சலி கூறுகையில்,
டாக்சி டிரைவரை தாக்கியதை நினைத்து வெட்கப்படுகிறேன். அன்று நான் குடிபோதையில் தவறாக நடந்து கொண்டேன். என் தந்தையை மருத்துவமனையில் அனுமதித்திருந்தோம். டாக்சியில் ஏறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தான் நானும், என் காதலரும் பிரிந்தோம்.
2 ஆண்டு காதல் முறிந்த கவலையில் இருந்தேன். அது தான் என் வாழ்வின் மோசமான தினம். டிரைவரை தாக்கியதால் பலர் என் குடும்பத்தாரை திட்டுகிறார்கள். அந்த சம்பவம் நடந்த இரவே நான் பலாத்காரம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று எனக்கு பலர் எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளனர்.
அந்த டிரைவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அவர் என் மீது புகார் எதுவும் கொடுக்கவில்லை. நான் பெரிய தவறு செய்துவிட்டேன் என்றார்.