இருட்டில் வரும் ‘பீடியான்’ பேய்க்கு பயப்படும் ’வீரப்பெண்’ மலாலா...
லண்டன்: பாகிஸ்தானில் தாலிபன்களுக்கு எதிராக பெண் கல்வியை முன்னிறுத்தி போராடி வரும் சிறுமி மலாலா, தனக்கு பேய் என்றால் பயம் என தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் பெண் கல்விக்காகக் குரல் கொடுத்த மலாலா என்ற சிறுமி தலிபான்களால் சுடப்பட்டார். இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவருக்கு இங்கிலாந்து அரசு இலவச சிகிச்சை அளித்தது. தற்போது பூரண குணமடைந்துள்ள அவர் பிர்மிங்காமில் உள்ள எட்க்பாஸ்டன் என்ற பள்ளியில் சேர்ந்து படித்து வருகிறார். ஆனாலும், மலாலா கொல்லப்பட வேண்டியவர் என தாலிபன்கள் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தாலிபன்களுக்கு எதிராக சிறிதும் பயமின்றி போராடி வரும் மலாலா, தான் பேய்க்கு பயப்படுவதாக கூறியுள்ளார்.
இது குறித்து ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது...
பீடியான்...
உண்மையைக் கூற வேண்டுமானால், எனக்கு பேய் என்றால் சிறிது பயம் தான். நாங்கள் பேயை பீடியான் என்றே அழைப்போம். அது இருட்டான இடங்களில் வரும் என அஞ்சுபவள் நான்.
பெண் எனும் சக்தி...
தாலிபன்கள் எங்களைப் பார்த்துப் பயப்படுகிறார்கள். பெண்களைப் பார்த்து அஞ்சுகிறார்கள். பெண் என்பவள் மாபெரும் சக்தி.
தாலிபன்களின் அச்சம்...
அத்தகைய பெண்கள் கல்வியறிவு பெற்றால், அவளது சக்தி இன்னும் பலமடங்கு அதிகமாகும் என அஞ்சுகிறார்கள் தாலிபன்கள். சமூகத்தில் பெண்கள் அங்கம் வகிப்பதையோ, சமூக முன்னேற்றத்தில் பங்கு பெறுவதையோ அவர்கள் விரும்புவதில்லை.
பெண்களின் கடமை...
பெண்களின் பணி சமையல் செய்வது, குடும்பத்திற்கு உணவு பரிமாறுவது, குழந்தைகள் பெறுவது, அவர்களை வளர்ப்பது என்பது மட்டும் தான் என நினைக்கிறார்கள் தாலிபன்கள்.
இந்தியாவுடன் நல்லுறவு...
எதிர்காலத்தில் பாகிஸ்தானின் பிரதமராக ஆசைப்படுகிறேன். நாட்டின் கல்வி, ஆரோக்கியம் போன்ற வளங்களை அதிகப்படுத்த விரும்புகிறேன். மேலும், இந்தியாவுடன் நல்லுறவுடன் வாழ விரும்புகிறேன்.
அதே மலாலா தான்...
நான் இப்போது அதே பழைய மலாலா தான். பெண் கல்விக்காகப் போராடும் அதே மலாலா தான் ‘ எனத் தெரிவித்துள்ளார் மலாலா.
தாலிபன்களுக்கு பயமில்லை....
அமைதிக்கான நோபல் பரிசுக்காக பரிந்துரை செய்யப்பட்ட மலாலா முன்னர் ஒருமுறை, ‘தாலிபன்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. நான் அவர்களப் பார்த்து பயப்பட மாட்டேன்' எனக் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.