பாகிஸ்தான் தெருக்களில் பயமின்றி நடக்க வேண்டும் என ஏங்குகிறேன்.. மலாலா உருக்கம்
பாகிஸ்தான் தெருக்களில் பயமின்றி நடந்து மக்களோடு பேச வேண்டும் என்கிற கனவு உள்ளது என்று மலாலா தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தெருக்களில் பயமின்றி நடந்து மக்களோடு உரையாட வேண்டும் என்று பாகிஸ்தான் பெண்களின் கல்வி உரிமைக்காகப் போராடி வரும்
மலாலா தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் பெண்களின் கல்வி உரிமை குறித்து பேசிய காரணத்திற்காக கடந்த 2012ம் ஆண்டில் மலாலா என்கிற 15 சிறுமி தலிபான்களால் சுடப்பட்டார். தலை மற்றும் மண்டையோட்டில் குண்டுகள் பாய்ந்ததை அடுத்து உயிருக்குப்
போராடிய அவர், அறுவைசிகிச்சை மூலம் குணமடைந்தார். ஆனால், அந்த சம்பவத்திற்கு பிறகு அவர் லண்டனில் வசித்து வந்தார்.
மலாலாவை சுட்டதோடு மட்டுமில்லாமல், அவர் மேற்கத்திய கலாச்சாரத்தை பாகிஸ்தானில் பரப்ப முயன்றார். அதனால்தான் அவரைச் சுட்டுக்கொல்ல முயன்றோம்ஆனால் அவர் தப்பிவிட்டார் என்று தலிபான்கள் தெரிவித்தனர். தற்போது லண்டனில் தனது கல்வியை மேற்கொண்டு வரும் மலாலாவிற்கு 2014ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது. மேலும் இளைஞர்களுக்கான தூதராகாவும் உள்ளார். பெண் கல்வி மற்றும் பெண்ணுரிமைக்கும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த நாடான பாகிஸ்தானுக்கு பலத்த பாதுகாப்புடன் சென்றுள்ளார். அங்கு இஸ்லாமாபாத் பிரதமர் அலுவலகத்தில்மக்களின் முன்பு உரையாற்றினார்.
அப்போது, என்னுடைய கனவு பாகிஸ்தான் வரவேண்டும் என்பதுதான். அது தற்சமயம் நிறைவேறிவிட்டது. நான் சுடப்பட்டபோது இனிமேல் இங்கு வாழ முடியாதோ என்று பயந்தேன். ஆனால், தற்போது உயிருடன் இங்கு எனது நாட்டில் இருக்கிறேன். பாகிஸ்தானின் தெருக்களில் எந்த வித பயமின்றி மக்களோடு உரையாட வேண்டும்
என்று தோன்றுகிறது. ஆனால் அது நடக்குமா என்று தெரியவில்லை என்று அவர் உருக்கமாகப் பேசியுள்ளார்.