கொரோனா வாக்சின் எனக்கு தேவையில்லை... "பிரேசிலின் டிரம்ப்" பிடிவாதம்!
பிரேசிலியா: கொரோனா வாக்சின் கண்டுபிடித்த பின்னர் அதனை நான் எடுத்துக் கொள்ள மாட்டேன் என்று பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சேனரோ அதிரடியாக தெரிவித்துள்ளார்.
உலகின் பல நாடுகள் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டு இருக்க, முன்னணி நாட்டின் அதிபர் இவ்வாறு கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
போல்சேனரோ கடந்த ஜூலை மாதம் கொரோனவால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் அமெரிக்காவின் டிரம்ப் போல இவரும் கொரோனாவை தொடர்ந்து அலட்சியமாகவே பாவித்து வருகிறார்.
பேயாட்டம்
கடந்த ஒரு வருடமாக வல்லரசு நாடு, வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கொரோனா பெருந்தொற்று பேயாட்டம் ஆடி வருகிறது. அதனை கட்டுப்படுத்த முடியாமல் பல நாடுகள் திணறி வருகின்றன. அதனால்தான் எப்படியாவது தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்க வேண்டும் என உலக நாடுகள் போராடி வருகின்றன.
உலக நாடுகள் அதிர்ச்சி
இந்த நிலையில் கொரோனா உயிரிழப்பில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ள பிரேசில் அதிபர் கொரோனா தடுப்பு மருந்தை உட்கொள்ள மாட்டேன் என தெரிவித்துள்ளது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை எற்படுத்தி உள்ளது.
இது ஏன் உரிமை
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை பல்வேறு டெலிவிஷன்களில் ஒளிபரப்பானதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.ஜெய்ர் போல்சேனரோ அந்த அறிக்கையில், கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்த பின்னரும் நான் அதை எடுக்க போவதில்லை. இது என் உரிமை. இதை உங்களுக்கு உறுதியாக சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.
மக்களுக்கு தேவையில்லை
மேலும், கொரோனாவை பரவாமல் தடுப்பதில் மாஸ்க் உதவிகரமாக உளளதா என்பது குறித்தும் அவர் சந்தேகம் எழுப்பி உள்ளார்.போல்சேனரோ தடுப்பு மறுத்து குறித்து சர்ச்சை கருத்து கூறுவது இது முதல் முறையல்ல. வாக்சின் குறித்து பல நேரங்களில் கேள்வி எழுப்பி வந்த அவர் பிரேசில் மக்களுக்கு வாக்சின் தேவையில்லை என்றும், தனது நாய்க்கு வேண்டுமானால் அது தேவைப்படும் என கூறியது குறிப்பிடத்தக்கது.