கஷ்ட காலத்திலும் ஆதரவா இருந்தீங்க... இனி என் வேலைய மட்டும் பாருங்க... தீயா இருக்கும் - கிம் ஜாங்
சியோல்: இதுவரை தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதற்கு மன்னிப்பு கேட்டுள்ள வட கொரிய அதிபர், இனி வரும் காலங்களில் தான் கடுமையாக உழைக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வடகொரியாவில் தற்போது சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது, அந்நாட்டின் அதிபராக கிம் ஜாங் உள்ளார்.
திடீரென்று பல நாட்கள் மாயமாவது, அரசு உயர் அதிகாரிகள் சுட்டுக்கொல்ல உத்தரவிடுவது என அவரது பல செயல்கள் தொடர்ந்து உலக நாடுகளால் விமர்சிக்கப்படும். இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் வட கொரிய அதிபர் கிம் ஜாங், புத்தாண்டு தினத்தில் தனது நாட்டு மக்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
20 நாள் மாயம்.. வதந்திகளுக்கு மத்தியில் பழைய பன்னீர்செல்வமாக ஜம்முனு வந்த கிம்! மறக்க முடியாத 2020!
தவறுகளுக்கு ஸாரி
அதில் கடினமான காலங்களில்கூட ஆளும் கட்சியை நம்பி ஆதரித்ததற்கு நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக அதில் குறிப்பிட்டுள்ளார். மேலும், பொருளாதார வளர்ச்சி குறித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதற்குப் பொதுமக்களிடம் மன்னிப்பைக் கேட்டுக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
இனி தீயா வேலை செய்வேன்
சர்வதேச பொருளாதாரத் தடைகள் மற்றும் கொரோனா வைரஸ் காரணமாக அமல்படுத்தப்பட்ட கடும் கட்டுப்பாடுகளால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களைத் தான் அறிவேன் என்றும் அதற்காகவும் மக்கள் தன்னை மன்னிக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். மேலும், "எனது மக்களின் விருப்பங்களை நிறைவேற்றவும் மக்கள் எதிர்பார்க்கும் புதிய சகாப்தத்தை முன்னரே கொண்டு வரவும் இன்று முதல் நான் கடுமையாக உழைப்பேன்" என்றும் அவர் அதில் கூறியுள்ளார்.
அஞ்சலி
புத்தாண்டின்போது, கிம் ஜாங், மூத்த தலைவர்களுடன் சென்று வட கொரியாவின் முந்தைய ஆட்சியாளர்களாக அவரது தந்தை மற்றும் தாத்தா ஆகியோரின் உடல்களுக்கு மரியாதை செலுத்தினார். வட கொரியாவின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் வகையில் புதிய ஐந்தாண்டு திட்டத்தை கிம் ஜாங் வரும் ஜனவரி மாதம் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா இல்லாத வட கொரியா
இதுவரை தனது நாட்டில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என்று வட கொரியா தெரிவித்துள்ளது. இருப்பினும், இத்தகவல்கள் பொய்யானவை என்று தென் கொரிய மற்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா பரவலைத் தடுக்க அந்நாட்டு விதித்துள்ள மிகக் கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக வட கொரிய பொருளாதாரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.