ஹவாய் கடற்படை தளத்தில் துப்பாக்கிச் சூடு.. இந்திய விமான படை தளபதி உள்ளிட்டோர் உயிர் தப்பினர்!
ஹோனோலுலு: அமெரிக்காவின் ஹவாய் தீவில் கடற்படை தளத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உள்பட 3 பேர் பலியாகிவிட்டனர். அப்போது அங்கிருந்த இந்திய விமானப்படை தளபதி ராகேஷ் குமார் சிங் பதௌரியா உள்ளிட்டோர் காயமின்றி உயிர் தப்பினர்.
அமெரிக்காவின் ஹவாய் தீவில் பியர்ல் ஹார்பர் கடற்படை மற்றும் விமான படை தளம் அமைந்துள்ளது. இங்குள்ள தெற்கு நுழைவுவாயில் வழியே மர்ம நபர் ஒருவர் நுழைந்தார்.
அவர் திடீரென அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இந்த தாக்குதலில் இருவர் பலியாகிவிட்டனர். அவர்களின் உடல் நிலை மோசாக உள்ளது. மேலும் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க மாலுமி
இந்த சம்பவத்திற்கு பின் துப்பாக்கி சூடு நடத்திய நபர் தனது தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் கடற்படை சீருடை அணிந்து இருந்து உள்ளார். அவர் அமெரிக்க மாலுமி என கூறப்படுகிறது.
அதிகரிக்கக் கூடும்
காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
காயம் இல்லை
இந்த துப்பாக்கிச் சூடு நிகழ்ந்த போது இந்திய விமான படை தளபதி ராகேஷ் குமார் சிங் பதௌரியா மற்றும் அவரது குழுவினர் அங்கிருந்தனர். அவர்கள் அனைவரும் காயம் ஏதும் இன்றி உயிர் தப்பினர்.
துப்பாக்கிச் சூடு
ஹவாய் தீவில் பெர்ல் துறைமுகத்தில் நடைபெறும் பசிபிக் விமான படை தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள பதௌரியா மற்றும் அவரது குழுவினர் சென்றிருந்தனர். துப்பாக்கிச் சூடு ஏன் நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து இந்திய விமான படை எந்த தகவலையும் அறிவிக்கவில்லை.