மோடியை விட நல்லாவே இருக்கேன்.. போட்டி வைத்தால் பலத்தை நிரூபிக்க தயார்- மசூத் அஸார் சவால்
Recommended Video
இஸ்லாமாபாத்: இந்திய பிரதமர் நரேந்திர மோடியை விட நன்றாகவே இருக்கிறேன். போட்டி வைத்தால் நான் பலத்தை நிரூபிக்க தயார் என்று ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அஸார் சவால் விடுத்துள்ளார்.
புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாரானது.
இதையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்திய விமானப் படை பாகிஸ்தானுக்குள் நுழைந்து ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் முகாம்கள் மீது குண்டு வீசியதால் ஏராளமான தீவிரவாதிகள் பலியாகிவிட்டதாகவும் இயக்கத்தின் தலைவன் மசூத் அஸார் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டது.
புனைப் பெயரில் கட்டுரை
இந்நிலையில் ஜெய்ஷ் இ முகமதுவின் பத்திரிகையான அல்கலாமில் சாதி என்ற புனைப்பெயரில் மசூத் அஸார் கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் கூறுகையில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் முகாம்கள் தாக்கப்பட்டதாக கூறுவதும், அதில் பலர் பலியானதும் எனது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியான தகவல்கள் எதுவும் உண்மை இல்லை.
சுதந்திர போராட்டம்
எல்லோரும் நலமாக உள்ளோம். எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது. காஷ்மீரில் நடப்பது பயங்கரவாதம் அல்ல. அது சுதந்திர போராட்டம். இனி அது மாநிலம் முழுவதும் வேகமாக பரவும்,
முழு ஆரோக்கியம்
எனது உடல்நலம் பற்றி பேசுவதை விரும்பவில்லை. அதற்கு எதிராக பிரசாரம் நடந்து வருவதால் தற்போது பேச வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. நான் நலமாகத்தான் உள்ளேன். முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறேன்.
சவால்
எனது சிறுநீரகமும், கல்லீரலும் மிகவும் நன்றாகவே உள்ளது. கடந்த 17 ஆண்டுகளாக மருத்துவமனைக்கு நான் சென்றதில்லை. பல ஆண்டுகளாக மருத்துவர்களை கூட சந்தித்ததே இல்லை. மோடியை விட நலமாகவே இருக்கிறேன். வில்வித்தையோ துப்பாக்கிச் சுடும் போட்டியோ வைத்தால் மோடியை விட உடல்நலத்துடன் இருக்கிறேன் என்பதை நிரூபிக்கத் தயாராக உள்ளேன் என சவால் விடுத்துள்ளார்.