வெளியூரில் பணியில் இருந்தாலும் குழந்தைக்கு பெண் ஊழியர்கள் தாய்ப்பால் அனுப்ப ஐபிஎம் ஏற்பாடு
நியூயார்க்: பணியிலுள்ள பெண்கள் தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பாலை கொடுத்தனுப்பும் வசதியை தகவல் தொழில்நுட்ப முன்னணி நிறுவனமான ஐபிஎம் கொண்டுவர உள்ளது.
அமெரிக்க மல்டி நேஷனல் நிறுவனமான ஐபிஎம், இந்தியா உட்பட பல நாடுகளில் கிளைகள் திறந்துள்ளது. அந்த நிறுவனத்தின் துணை தலைவர், பார்பரா ப்ரிக்மெய்ர் கூறுகையில், பெண்கள் நலனுக்காக, தாய்ப்பால் கொடுத்தனுப்பும் வசதியை உருவாக்க உள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.
பணியிலுள்ள பெண்கள், தங்கள் குழந்தைகளை பராமரிக்க முடியவில்லை என்ற கவலையின்றி இனிமேல் பணியாற்ற இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஐபிஎம் நிறுவன மொத்த ஊழியர்களில் சுமார் 29 சதவீதத்தினர் பெண்கள். அவர்களில் கைக்குழந்தைகளை வைத்திருப்போர், அலுவலக விஷயமாக வெளியூர் சென்றாலோ, அல்லது உள்ளூரிலே தொலை தூரங்களுக்கு சென்றாலோ, தாய்ப்பால் தர முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, தாய்ப்பாலை கெட்டுப்போகாமல் வைத்திருக்கும் கருவி உதவியுடன், தாங்கள் எங்கிருந்தாலும், தங்கள் குழந்தைக்கு தாய்ப்பாலை கொடுத்தனுப்ப முடியும்.
இதற்கான செலவீனங்களை ஐபிஎம் ஏற்றுக்கொள்ள உள்ளது. வேறு எந்த நிறுவனத்திலும் இதுபோன்ற வசதி இருப்பதாக தெரியவில்லை என்று பார்பரா தெரிவிக்கிறார். வெளிநாடுகளில் சுற்றுப் பயணத்தில் இருக்கும்போதும், வீட்டிலுள்ள தங்கள் குழந்தைகளுக்கு பெண்களால் தாய்ப்பாலை தர முடியும் சூழ்நிலை உருவாக்குவதே தங்கள் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.