ஐஸ்லாந்து பிரதமர் ராஜினாமா - பனாமா பேப்பர் ஊழல் எதிரொலி !
ரெய்கஜாவிக்: ஐஸ்லாந்து பிரதமர் சிக்மண்டர் டேவிட் தனது பதவியை ராஜினாமா செய்தார். பிரதமரின் மனைவி பனாமா நாட்டில் முதலீடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
உலகம் முழுவதும் அரசியல் முக்கியஸ்தர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பிரபலங்கள் பலர் தங்கள் கணக்கில் வராத சொத்துக்களை பனாமா நாட்டில் எவ்வளவு பதுக்கி வைத்திருக்கிறார்கள், எப்படி எல்லாம் வரி ஏய்ப்பு செய்துள்ளார்கள் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது. இதுதான் 'பனாமா பேப்பர்ஸ்'. இந்த அம்பலப் பட்டியலில் இந்தியர்கள் 500 பேரின் பெயர்கள் இடம் பெற்றிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த பட்டியலில் ஐஸ்லாந்து தீவு பிரதமர் சிக்மண்டூர் டேவிட் மற்றும் அவரது மனைவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதில் டேவிட் மற்றும் அவரது மனைவி பிரிட்டீஸ் விர்ஜின் தீவுகளில் கடற்கரையை ஒட்டிய நிறுவனம் ஒன்றினை வாங்கியதற்கான ஆவணங்களை வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து அங்குள்ள எதிர்கட்சிகள் போராட்டத்தை அறிவித்தன.
இதனை தொடர்ந்து, தன் மீதான குற்றச்சாட்டிற்கு பொறுப்பேற்று பிரதமர் டேவிட் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று ஐஸ்லாந்தின் முன்னாள் பிரதமர் ஜோகன்னா வலியுறுத்தினார். இருப்பினும் தன் மீதான குற்றாச்சாட்டுகளை பிரதமர் மறுத்து வந்தார். பதவி விலகும் எண்ணம் இல்லை என்றும் திட்டவட்டமாக கூறிவந்தார்.
எதிர்கட்சிகளும் இந்த பிரச்சினையை தீவிரமாக கையில் எடுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பிரதமர் டேவிட்டுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மேலும் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஐஸ்லாந்து மக்களும் இதே கோரிக்கை வலியுறுத்தினர்.
இந்நிலையில் பிரதமர் சிக்மண்டூர் டேவிட் தனது பதவியை ராஜினாமா செய்ய ஒத்துக்கொண்டுள்ளதாக முற்போக்கு கட்சியின் துணைத் தலைவரும் விவசாய துறை அமைச்சருமான சிக்குர்டுர் ஐன்கி தொலைக்காட்சி ஒன்றின் நேரடி ஒளிபரப்பில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பிரதமர் பதவியை மட்டும்தான் ராஜினாமா செய்துள்ளார். தொடர்ந்து கட்சியின் தலைவராக நீடிப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து ஐஸ்லாந்தில் கடந்த இரண்டு நாட்களாக நிலவிவந்த பதற்றமான அரசியல் சூழல் முடிவுக்கு வந்துள்ளது. அந்நாட்டில் கடந்த 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நெருக்கடிக்குப் பின்னர் மக்கள் வெளிப்படையான, நேர்மையான நிர்வாகத்தினை எதிர்பார்க்கின்றனர்.