சீனாவின் ஒரு அங்குல நிலத்தைகூட விட்டுகொடுக்க மாட்டேன்.. நாடாளுமன்றத்தில் சீறிய ஜி ஜின்பிங்
சீனாவின் ஒரு அங்குல நிலத்திற்கு கூட மற்றவர்களை சொந்தம் கொண்டாடவிடமாட்டோம் என்று அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் குறிப்பிட்டுள்ளார்.
பெய்ஜிங் : சீனாவிற்கு சொந்தமான ஒரு அங்குல நிலத்தைக் கூட மற்றவர்கள் யாரும் சொந்தம் கொண்டாடவிடமாட்டோம் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவில் ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபராகப் பதவி வகிக்க முடியும் என்கிற சட்டத்தில் சமீபத்தில் சீன நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட சட்டதிருத்தத்தின் மூலம் மாற்றியமைக்கப்பட்டது.
அதன்படி, ஏற்கனவே அதிபராக இருந்த ஜி ஜின்பிங் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையுடன், ராணுவத்தின் முப்படைகள் உள்ளிட்ட நாட்டின் உயரிய அதிகாரங்களைக் கையில் வைத்திருக்கும் நபராக ஜின் பிங் உயர்ந்துள்ளார்.
மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜி ஜின்பிங், நாடாளுமன்றத்தில் நேற்று அரை மணி நேரம் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், அதிகாரங்கள் குவிந்து கிடந்தாலும் நான் மக்களுக்கு ஒரு வேலைக்காரனாகவே எனது கடமைகளை நிறைவேற்றுவேன் என்று அவர் உறுதியளித்தார்.
மேலும், நமது இறையாண்மை மற்றும் எல்லைப்பகுதி ஒருங்கிணைப்பு ஆகியவற்றை சிறப்பாகப் பாதுகாத்து சீன மண்ணின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன் என்றும், சீனாவிற்குச் சொந்தமான ஒரு அங்குல நிலத்தைக் கூட மற்றவர்கள் சொந்தம் கொண்டாட விடமாட்டேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சீனாவைப் பிளவுபடுத்த நினைக்கும் சக்திகள் தோல்வியைத் தழுவும் என்றும், 130 கோடி மக்களின் கனவுகள் அனைத்தும் விரைவில் மெய்யாக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
மேலும், அண்டை நாடுகளுடனும், உலகின் இதர நாடுகளிடனும் நட்புறவை பலப்படுத்துவதன் வாயிலாக சீனாவின் சீரமைப்பின் மூலம் ஒட்டுமொத்த மனித சமுதாயமும் பயனடையும் வகையில் நாங்கள் செயல்படுவோம் என்று ஜி ஜின்பிங் குறிப்பிட்டுள்ளார்.