‘நிரந்தர உறவு முறிவை’ சந்திக்க வேண்டும்: கத்தாருக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எச்சரிக்கை!
தங்களின் கோரிக்கைகளை கத்தார் ஏற்காவிட்டால் நிரந்தர உறவு முறிவை சந்திக்க நேரிடும் என ஐக்கிய அரபு அமீரகம் எச்சரித்துள்ளது.
துபாய்: தங்களின் கோரிக்கைகளை கத்தார் ஏற்காவிட்டால் நிரந்தர உறவு முறிவை சந்திக்க நேரிடும் என ஐக்கிய அரபு அமீரகம் எச்சரித்துள்ளது. மேலும் தங்களின் கோரிக்கைகளை கத்தார் கசிய விடுவதாகவும் அமீரக நாடுகள் குற்றம் சாட்டியுள்ளது.
உலகப் பணக்கார நாடுகளில் ஒன்றான கத்தார் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்கிறது, தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது என பஹ்ரைன், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் இந்தக் குற்றச்சாட்டுகளையே காரணமாக வைத்து கத்தார் உடனான ராஜாங்க ரீதியிலான உறவையும் அந்நாடுகள் அண்மையில் முறித்துக்கொண்டன. இதனால் தூதரக உறவு, போக்குவரத்து உள்ளிட்டவையையும் அந்த நாடுகள் துண்டித்துள்ளன.
அல்ஜஸிராவை மூடுங்கள்
இந்நிலையில் உறவை துண்டித்த அந்நாடுகள் கத்தாரிடம் சில கோரிக்கைகளை விதித்துள்ளன. அதன்படி கத்தாரின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான அல்-ஜஸீரா தொலைக்காட்சியை மூடுதல், கத்தாரில் தங்கியுள்ள சில தனிநபர்களை தங்களிடம் ஒப்படைப்பது உள்ளிட்ட நீண்ட கோரிக்கைகளை அவை முன்வைத்துள்ளன.
கத்தார் மறுப்பு
ஆனால் தனது ஒளிபரப்பை மூடக் கோருவது ஊடக சுதந்திரம் மீதான தாக்குதல் என்று கத்தாரின் அல்-ஜசீரா தொலைக்காட்சி கூறியுள்ளது. இதைத்தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ்சின் வெளியுறவு அமைச்சரான அன்வர் கர்காஷ் தனது ட்வீட்டர் பதிவில், கத்தார் தனது அண்டை நாடுகளின் கோரிக்கைகளை கவனமாக பரிசீலிப்பது புத்திசாலித்தனமானது எனது கூறியுள்ளார்.
நிரந்தர உறவு முறிவு
இல்லாவிட்டால் நிரந்தர உறவு முறிவை நிரந்தரமாக சந்திக்க வேண்டும் என்றும் அவர் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் அண்டை நாடுகளின் கோரிக்கைகளை கத்தார் கசிய விடுவதாகவும் கர்காஷ் குற்றஞ்சாட்டினார்.
சமரசம் செய்ய முன்வந்த ஐநா
இதனிடையே வளைகுடா நாடுகளுக்குக்குள் ஏற்பட்டுள்ள மோதலை முடிவிற்கு கொண்டு வர ஐநா அவை முன்வந்துள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நாடுகளிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றும் ஐநா அவை அறிவித்துள்ளது.
அமெரிக்காவும் தயார்
இவ்விஷயத்தில் தானும் உதவத் தயார் என்று அமெரிக்கா கூறியுள்ளது. அல்ஜஸிரா ஒளிப்பரப்பை துண்டிக்க வளைகுடா நாடுகள் வலியுறுத்துவதால் அதில் பணிபுரியும் ஊழியர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.