ஈரானை அமெரிக்கா அடிச்சா.. வலி அவங்களுக்கு மட்டுமில்லை பாஸ்.. நமக்கும்தான்.. காரணம் இதுதான்!
ஈரான் - அமெரிக்கா நடுவே இந்தியா சிக்கி கொண்டுள்ளது
Recommended Video
டெஹ்ரான்: ஈரான் - அமெரிக்க பிரச்சனையால் உலக நாடுகள் பதற்றத்தில் உள்ளன.. எந்த நேரத்திலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.. இந்த இரு நாடுகளின் பிரச்சனையால் இந்தியாவுக்கு பாதிப்புகள் நிறையவே வர உள்ளன. அவைகளை பற்றிதான் பார்க்க போகிறோம்!
ஈரான் நாட்டு ராணுவத் தளபதி காசிம் சுலைமானி.. இவர்தான் அமெரிக்காவின் பரம எதிரி, இவரைக் கொன்ற பிறகுதான் உலக நாடுகளில் ஒருவித பதட்டம் தொற்றி கொள்ள ஆரம்பித்துள்ளது.. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் இது கலவரம் கலந்த பதற்றத்தை அதிகரித்திருக்கிறது.
ஆனால், அமெரிக்கா - ஈரான் மோதல் என்பது சுலைமானியின் கொலையால் நேற்று தொடங்கியது இல்லை... இது 40 வருட பகை.. அப்போது எண்ணெய் வளங்களுக்கு வைக்கப்பட்ட குறிதான், இன்று வெடித்து கிளம்பி உள்ளது.. தன் வளங்களை பாதுகாத்து கொள்ள ஈரான் படாத பாடு பட்டு வந்தாலும்.. அதற்கு அமெரிக்கா அணு அளவுகூட அசைந்து கொடுக்காமல் உள்ளது என்பதுதான் கடந்த கால, நிகழ்கால சரித்திர உண்மை!
ஈராக் தாக்குதலில் எத்தனை அமெரிக்க வீரர்கள் பலியானார்கள்.. தொடரும் மர்மம்.. எதை மறைகிறார் டிரம்ப்?
எண்ணெய் திருடன்
அமெரிக்காவை செல்லமாக "எண்ணெய்த் திருடன்" என்றே கூட கூறலாம். எண்ணெய் வளம் எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் அமெரிக்காவின் மூக்கு நுழைந்திருப்பதை காணலாம். அதிக அளவில் கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்யும் நாடுகள் கொண்ட பட்டியலில், ஈரானின் பங்கு குறிப்பிடத்தக்கது.. தொடர்ந்து முதல் 3 இடங்களுக்கு உள்ளாகவே அந்நாடு இருந்து வருகிறது. ஆனால்... இந்த 3 மாதங்களில் மட்டும் வளைகுடா நாடுகளில் என்னென்னமோ நடந்துவிட்டன!
தாக்குதல்கள்
அமெரிக்க எண்ணெய் டேங்கர்களும் ட்ரோன்களும் தாக்கப்பட்டன. எவ்வளவு தாங்க முடியுமோ அவ்வளவு அழுத்தத்தை அமெரிக்கா கொடுத்தும் ஈரானை ஒன்றும் அசைக்கவே முடியவில்லை... அது மட்டுமில்லை... சிரியாவில் இருந்து பஷீர் அல் அசாத்தையும் எதுவுமே செய்ய முடியவில்லை.. ஈரான், ஈராக் போன்ற நாடுகளின் செல்வாக்கும் அதிகரித்தே வந்தது.. இதுதான் அமெரிக்காவின் ஆத்திரத்தை தூண்டியது. அதனால்தான் ஈரான் மண்டையில் ஒரு தட்டு தட்டி வைக்கவும், அதை தன் காலில் போட்டு நசுக்கவும் அடுத்த முயற்சியில் அமெரிக்கா இறங்கி உள்ளது.
பொருளாதார தடைகள்
ஈரான் மீதான பொருளாதார தடைகள் மட்டுமல்லாமல், மற்ற பொருளாதார தடைகளும்கூட மெல்ல மெல்ல அகற்றப்படும் என்ற சவுதி அரேபியாவின் விருப்பம்தான் தனது விருப்பமும் என்பதை சொல்லாமல் சொல்ல நினைக்கிறது அமெரிக்கா. நேரடியாக ஈரானை தாக்குவதையும் அமெரிக்கா தவிர்த்தாலும், வளைகுடாவில் இருக்கும் ஈராக் முதல் ஓமன் வரை பல்லாயிரக்கணக்கான வீரர்களை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது.
சமாதானம்
ஒருவேளை அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நேரடி போர் வந்தால், தங்களுக்கும் ஏராளமான பாதிப்புகள் ஏற்படும் என்று துபாய் முதல் ஐக்கிய அரபு அமீரகம் வரை நடுங்குகின்றன. இந்த நாடுகளிடையேயான பேச்சுவார்த்தை.. சமாதானம்.. என்பன போன்ற நடவடிக்கைகள் தென்படவும் தொடங்கலாம்.
இந்தியர்கள்
ஆனால், அமெரிக்கா, ஈரான் இடையே நடந்து வரும் இந்த பதற்ற போரில் இந்தியா வசமாக சிக்கி கொண்டுள்ளது. முதலாவதாக, வளைகுடாவில் மட்டும் 80 லட்சம் இந்தியர்கள் வேலை செய்து வருகிறார்கள்.. 80 சதவீத எண்ணெயை உள்நாட்டு தேவைக்காக இந்தியா இறக்குமதி செய்து கொள்கிறது.. அங்கிருந்து எரிவாயுவையும் வாங்கி கொள்கிறது.. அதனால் எப்படியும் இந்த வளைகுடா நாடுகளுடன் 100 பில்லியனுக்கும் மேல் வர்த்தகம் சர்வ சாதாரணமாக இந்தியா நடத்துகிறது.. இதெல்லாம் இனி சிதைந்து போக வாய்ப்புள்ளது.
பண வரவு
மேலும் அந்த இந்தியர்கள் மூலம் வருஷந்தோறும் சுமார் 2 லட்சத்து 87 ஆயிரம் கோடி ரூபாய் இந்தியாவுக்கு வந்து கொண்டிருக்கிறது.. ஒருவேளை இந்த போர் வந்துவிட்டால், அவ்வளவும் பாதிக்கப்படும்.. குறிப்பாக அரபு நாடுகளில் இருந்து வரும் இரண்டரை லட்சம் கோடிக்கும் அதிகமான வெளிநாட்டு பண வரவும் சேர்ந்தே பாதிக்கப்படும்.
மந்த நிலை
அடுத்த பிரச்சனை கச்சா எண்ணெய்.. இப்பவே கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வர ஆரம்பித்துவிட்டது.. நம் நாட்டின் பொருளாதார நிலையில் மாற்றம் வந்துவிட்டது.. அப்படியென்றால் அந்நிய செலாவணியிலும் தாக்கம் துவங்கிவிடும் என்றே அஞ்சப்படுகிறது. அப்படி அந்நிய செலாவணி பற்றாக்குறை அதிகரித்துவிட்டால், ஆட்டோமேட்டிக்காக உணவு, குளிர்பானம், போக்குவரத்து, ரயில்வே, போன்றவைகளிலும் கடுமையான பாதிப்பு வரும்.. இந்த பாதிப்பு வேலையின்மையில் கொண்டு போய் நிறுத்தும்.. ஈரான் மீது தாக்குதல் நடந்து.. அதன்மூலம் 3-வது முறையாக எண்ணெய் விலை உயர்ந்துவிட்டால், இந்தியாவின் பொருளாதாரம் மேலும் அந்தரத்தில் தொங்கும்!
பணவீக்கம்
இப்பவே இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரை எதிரொலிக்க தொடங்கியுள்ளது... இந்த பெட்ரோல், டீசல் விலை அதிகரித்தால் சாமான்ய மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கவே செய்யும் என்பது இயல்பு.. பொருட்கள் விலை உயர்ந்தால், நாட்டின் பணவீக்கமும் மேலும் உயரும் என்பது யதார்த்தம்.. ஒருவேளை பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மத்திய அரசு வரியை குறைத்தால், இந்தியாவின் வருமானத்தை அது மேலும் குறைத்து நிதி பற்றாக்குறையை ஏற்படுத்தும். இன்னொரு பக்கம் தங்கம் விலையும் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது.
பாதுகாப்பு
இதெல்லாம் வர்த்தகம் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றாலும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை என்று ஒன்று நமக்கு உள்ளது.. மேற்கு ஆசியா பிரதேசங்களில் சுமார் 8 மில்லியன் இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர்.. ஒருவேளை அங்கு போர் வந்துவிட்டால், அங்கு வாழும் இந்தியர்களின் உயிருக்கும் ஆபத்துதான்.. வேலையும் பறிபோகும்.. வாழ்வாதாரமும் பாதிக்கப்படும்.. இங்கு என்றில்லை, ஏதாவது ஒரு பிரதேசத்தில் போடப்படும் குண்டில் ஒரு வீரர் இறந்தால்கூட, அது நம்மை வெகுவாக அசைத்து பார்த்துவிடும் என்பதுதான் நிஜம்.. அந்த அளவுக்கு இந்த சர்வதேச அரசியல் வலிமை பொருந்தி நம்மை மிரட்டி வருகிறது.
மனித உயிர்கள்
இப்படியெல்லாம் மட்டும் நடந்துவிட்டால்.. இந்தியா எந்த கதியாக இருக்கும் என்றே நம்மால் யூகிக்க முடியவில்லை.. அவ்வளவு ஏன்? 1973-ல் இந்திரா காந்தி ஆட்சியில் நடந்ததைபோல ஒரு நிலை கூட வரலாம்.. அதனால் இதையெல்லாம் தடுத்து நிறுத்த.. இந்திய பொருளாதாரம் சரிவை சந்திக்காமல் இருக்க.. எந்த பாதிப்பையும் தராமல் இருக்க.. இம்ரான்கானைபோல... ஓமனைபோல.. இந்தியாவும் தன்னால் ஆன சமாதான முயற்சியில் இறங்க வேண்டும்!!! காரணம்.. இன்னொரு போரை நம்மால் தாங்கவோ.. அதன் விளைவுகளை சந்திக்கவோ நமக்கு திராணி இல்லை.. மனசில் வலுவும் இல்லை.. எவ்வளவுதான் பணம் கொட்டினாலும் சரி.. அங்கீகாரம் கிடைத்தாலும் சரி.. மனித உயிருக்கு முன்பு எதுவுமே மகத்தானது இல்லை என்பதை அதிகாரமிக்க நாடுகள் புரிந்து கொள்வது மிக அவசியம்.