இந்திய தூதரகத்தில் இப்தார் விருந்து... முகம் சுளிக்க வைத்த பாகிஸ்தான் அதிகாரிகள்
இஸ்லாமாபாத்: இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்த இப்தார் விருந்தில் பங்கேற்ற விருந்தினர்களிடம், பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பினர் அவமரியாதையாக நடந்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகம், இப்தார் விருந்துக்கு அங்குள்ள நட்சத்திர ஓட்டலான செரேனாவில் நேற்று ஏற்பாடு செய்திருந்தது. இதில் கலந்துகொள்ளுமாறு சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி இப்தார் விருந்தில் கலந்து கொள்ள விருந்தினர்கள் வந்தனர்.
ஆனால், விருந்து நடந்த ஹோட்டலை பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பினர் முற்றுகையிட்டு அங்கிருந்த விருந்தினர்களை அவமரியாதை செய்து விரட்டிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்தார் விருந்தில் மீறி பங்கேற்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர்கள் அச்சுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த அழைப்பாளர்களை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட பாகிஸ்தான் அதிகாரிகள் இந்திய தூதரகம் அளிக்கும் இப்தார் விருந்தில் பங்கேற்க வேண்டாம் என்று மிரட்டல் விடுத்தனர். கண்டுபிடிக்க முடியாத ரகசிய தொலைபேசி எண்களில் இருந்து வந்த இந்த மிரட்டல்களுக்கு அடிபணியாமல் பலர் இப்தார் விருந்துக்கு வந்தனர்.
பாகிஸ்தான் அரசின் இந்த கேவலமான செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தானுக்கான உயர் தூதர் அஜய் பிஸாரியா, 'பாகிஸ்தான் அதிகாரிகளின் நாகரிகமற்ற இதுபோன்ற மிரட்டல்போக்கு தூதரகங்களுக்கு இடையிலான ராஜதந்திர முயற்சிகளை சீரழித்து விடும். எங்கள் இப்தார் நிகழ்ச்சிக்கு வந்து, பாகிஸ்தான் அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்ட அனைவரிடமும் நாங்கள் மன்னிப்பு கோருகிறோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் வான் எல்லையில், விமானங்கள் பறக்க விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை, 94 நாட்களுக்கு பிறகு, நீக்கியது இந்திய விமானப் படை. இதே போல், வான் வழித்தட கட்டுப்பாடுகளை பாகிஸ்தானும் விரைவில் நீக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.