113 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த பெண் போராளியின் கடிதம்
பிரிட்டனில் பெண்களின் வாக்குரிமைக்காக போராடி சிறைக்கு சென்ற முதல் பெண் எழுதிய கடிதம் ஒன்றினை, அது எழுதப்பட்ட 113 ஆண்டுகளுக்கு பிறகு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக வரலாற்றாசிரியர் கண்டறிந்துள்ளார். இதற்கு முன்னர் இப்படி கடிதம் இருந்ததென அறியப்படவில்லை.
பெண்களுக்கு வாக்குரிமையை அளிக்க வேண்டுமென்ற போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் ஒருவரான அன்னி கென்னி மான்செஸ்டர் சிறையிலிருந்து 1905ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்ட அடுத்த தினம் இந்த கடிதம் எழுதப்பட்டது என்று தெரியவந்துள்ளது.
பெண் வாக்குரிமைக்காக போராடிய பெண்ணொருவரால் அவரது சகோதரிக்கு எழுதப்பட்டுள்ள இந்த கடிதம் கனடாவிலுள்ள ஒரு காப்பகத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
"இதுபோன்றதொரு கடிதம் இதற்கு முன்புவரை கிடைக்கப்பெறவில்லை" என்று லின்சி ஜென்கின்ஸ் என்ற அந்த வரலாற்றாசிரியர் கூறுகிறார்.
கென்னியின் குடும்பத்தினர் குறித்த தகவல்களை இந்த வரலாற்றாசிரியர் தேடிக்கொண்டிருந்தபோது கனடாவிலுள்ள ஆவண காப்பகம் ஒன்றில் இந்த கடிதம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அச்சமின்றி செயல்பட்டார்
"பெண்களின் வாக்குரிமைக்காக போராடி சிறைக்கு சென்ற பெண்ணொருவர் எழுதியாக இதுவரை கிடைத்துள்ள ஒரே கடிதம் இதுதான்" என்று ஜென்கின்ஸ் பிபிசியிடம் கூறினார்.
"இந்த கடிதத்தை எழுதும்போது அவர்களுக்கு அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது குறித்து எதுவும் தெரியாது. அதாவது, தங்களது போராட்டம் வெற்றிபெறப்போகிறது என்பதை அறியாமலேயே இந்த கடிதத்தை எழுதியவர் எடுத்த முடிவுகள் அவரது வாழ்க்கையில் செய்த பெரிய தவறுகளாகிவிட்டன" என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விரிவுரையாளரான ஜென்கின்ஸ் கூறுகிறார்.
"அந்த காலத்தில் இந்த பெண்கள் வாக்குரிமைக்காக போராடி சிறைக்கு சென்றது என்பது மிகப் பெரிய விஷயமாகும். அப்போது மக்களிடையே அதிர்ச்சியளிக்கும் முடிவாக பார்க்கப்பட்ட இது, இறுதியில் வெற்றியை தேடி தரும் என்று அவர்கள் தெரிந்திருக்கவில்லை" என்று அவர் மேலும் கூறுகிறார்.
பிரிட்டனின் ஓல்ட்ஹாம் பகுதியை சேர்ந்த தொழிலாள வர்க்க பெண்ணான அன்னி கென்னி தனது 10வது வயதிலிருந்து பஞ்சு தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்தார்.
இந்நிலையில், பிரிட்டனில் பெண்களுக்கான வாக்குரிமையை பெற்றதில் கென்னியின் பங்கு அவ்வப்போது மழுங்கடிக்கப்படுவதாக ஜென்கின்ஸ் கூறுகிறார்.
1912 முதல் 1914ஆம் ஆண்டு வரை பிரிட்டனில் பெண்களுக்கான வாக்குரிமையை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் கென்னி முக்கிய பங்காற்றினார்.
வாக்குரிமை சார்ந்த எண்ணற்ற போராட்டங்களில் பங்கேற்ற கென்னி பலமுறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் அவர் உண்ணாவிரத போராட்டத்தையும் மேற்கொண்டுள்ளதாகவும் ஜென்கின்ஸ் விளக்குகிறார்.
கடிதத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது?
1905ஆம் ஆண்டு ஒருமுறை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட மறுநாள் மான்செஸ்டரிலிருந்து தனது சகோதரியான நெல்லுக்கு கென்னி இந்த கடிதத்தை எழுதினார்.
"நான் நேற்று காலை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டேன் என்று கூறினால் நீ ஆச்சர்யப்படுவாய்" என்று கென்னி தனது கடிதத்தை தொடங்குகிறார்.
இங்கு நடக்கும் விஷயங்கள் குறித்து நீ என் மீது "கோபத்துடன் இருந்தாலும்" நான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவுடன் என்னை வாழ்த்துவதற்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர் என்று அவர் அதில் கூறியுள்ளார்.
"மான்செஸ்டர் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்" என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
தான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதை பற்றியும், நகர சூழ்நிலை பற்றியும் விளக்கிய பிறகு, "என்னால் ஒவ்வொரு வாரமும் வீட்டிற்கு பணம் அனுப்பமுடியவில்லை" என்று தனது சகோதரியிடம் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்:
- விபத்தில் சிக்கியவர் கணவர் என தெரியாமல் சிகிச்சை அளித்த செவிலியர்
- இந்தியாவில் தமிழ் - இந்தி; மொழி அரசியல் ஆதிக்கம் செலுத்திய உலக நாடுகள்
- ரஃபேல் ஊழல் குற்றச்சாட்டு: இது இன்னொரு போஃபர்ஸ் ஊழலா?
- 'சிந்துச் சமவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே'