வறட்சி நிலவிய போதும் வளர்ச்சி.. கென்யாவில் இந்திய சமூகத்தினர் மத்தியில் மோடி உரை
நைரோபி: கடந்த இரண்டாண்டுகளில் இந்தியாவில் பல இடங்களில் வறட்சி நிலவிய போதும் 7.6 சதவீதம் என்னும் வளர்ச்சியை அடைந்துள்ளோம். இதோடு நமது வளர்ச்சி நிற்காது. 8 சதவீதத்தையும் தாண்டி வளருவோம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
கடந்த 7ம் தேதி முதல் இன்றுவரை ஆப்பிரிக்காவின் 4 நாடுகளில் பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணம் செய்து வருகிறார்.
மொசாம்பிக், தென் ஆப்பிரிக்கா, தான்சானியா நாடுகளில் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்ட மோடி, தற்போது கென்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவருக்கு கென்யா அரசு சார்பில் ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
கென்ய தலைநகர் நைரோபியில் இந்திய சமூகத்தினர்கள் திரளாக பங்கேற்ற கூட்டத்தில் மோடி உரை நிகழ்த்தினர்.
அவர்கள் மத்தியில் மோடி பேசியதாவது: பல ஆண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர்கள் கென்யாவிற்கு தொழிலாளிகளாக வந்தனர். அவர்கள் இந்தியா திரும்புவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும், இங்கு வாழும் இந்திய வம்சாவளியினர் இந்திய கலாசாரத்தை பின்பற்றி வருகிறார்கள்.
இந்திய வம்சாவளியினர் நிறைந்துள்ள கென்யாவை பார்க்கும் போது மின இந்தியா போல் உணர்கிறேன். நாம் இந்த ஒட்டுமொத்த உலகத்தை நமது குடும்பமாக கருத வேண்டும். இந்தியா எப்போதும் தன் நாட்டின் வளர்ச்சியில் மட்டும் கவனம் கொள்ளவில்லை. ‛வாசுதேவ குடும்பகம்' என்னும் ஒட்டுமொத்த உலகை குடும்பமாக எண்ணும் நம்பிக்கைமிக்கவர்கள் நாம்.
கடந்த இரண்டாண்டுகளில் இந்தியாவில் பல இடங்களில் வறட்சி நிலவிய போதும் 7.6 சதவீதம் என்னும் வளர்ச்சியை அடைந்துள்ளோம். இதோடு நமது வளர்ச்சி நிற்காது. 8 சதவீதத்தையும் தாண்டி வளருவோம்.
எனது ஆட்சியில் 1000 நாட்களுக்குள் 18,000 இந்திய கிராமங்களுக்கு மின்சார வசதிகள் சென்று சேர்ந்துள்ளது. 70 வருடங்களாக நடக்காத மாற்றம் வெறும் 1000 நாட்களில் நிகழ்ந்துள்ளது. தனி நபரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் இந்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.