ஹிட்லரை போல் செயல்படும் மத்திய அரசு.. இனப்படுகொலைக்கு தூண்டிவிடும் ஆர்எஸ்எஸ்.. இம்ரான்கான் விமர்சனம்
இஸ்லாமாபாத்: காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கட்டளையை ஏற்று நடவடிக்கை எடுத்துள்ளதை பார்க்கும் போது அது ஹிட்லரின் நாசிசம் இயக்கத்தை நினைவுப்படுத்துகிறது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விமர்சித்துள்ளார்.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டது. அது போல் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டதால் அது மாநில அந்தஸ்தையும் இழந்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பும் ஆதரவும் எழுந்துள்ளது.
இந்த நிலையில் காஷ்மீரின் இத்தகைய நடவடிக்கையை பாகிஸ்தான் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். காஷ்மீரில் உள்ள முஸ்லிம் இன மக்களை அழிப்பதற்காகவே இத்தகைய நடவடிக்கையை இந்தியா எடுத்துள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
நாடுகள்
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் செயல்பாட்டை கண்டிக்க ஐ.நா. பாதுகாப்பு சபை, அமெரிக்கா, சீனா, சவூதி அரேபியா, துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளை அழைத்தார். ஆனால் அவை செவிசாய்க்கவில்லை.
டுவிட்டர்
இதையடுத்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஊர் ஊராக பஞ்சாயத்துக்கு சென்று மூக்கறுப்பட்டதுதான் மிச்சம். இதனால் இந்தியாவை தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
ஆர்எஸ்எஸ்
அவர் தனது டுவிட்டில் கூறுகையில் காஷ்மீர் பிரச்சினைக்கு இந்தியா எடுத்துள்ள முடிவானது காஷ்மீரில் உள்ள முஸ்லிம் இனத்தையே அழிக்கும் முயற்சியாகும். காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு, காஷ்மீரில் நிகழவுள்ள இனஅழிப்பு ஆகியவற்றை பார்க்கும் போது ஹிட்லரின் நாசிச சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு அதை செயல்படுத்துமாறு மத்திய அரசுக்கு ஆர்எஸ்எஸ் உத்தரவிட்டது போன்று உள்ளது. இது சர்வாதிகார போக்காகும்.
வேடிக்கை
நாடுகளை கைப்பற்றும் ஆசையில் ஹிட்லர் ஜெர்மனியில் உள்ள முனிச் நகரத்தில் இரண்டாம் உலக போர் மூலம் இனப்படுகொலையை இந்த உலகமே வேடிக்கை பார்த்தது போல் காஷ்மீரில் நடக்கவிருக்கும் படுகொலைகளையும் வேடிக்கை பார்ப்பார்களா என இம்ரான்கான் கேள்வி எழுப்பியுள்ளார்.