காஷ்மீர் விவகாரம்: ஐநாவும் கண்டுக்கலை.. முஸ்லிம் நாடுகளும் பேசலை... இம்ரான்கான் பெரும் புலம்பல்!
முசாபர்பாத்: ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு மாற்றம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை மற்றும் முஸ்லிம் நாடுகள் எதுவும் பேசாமல் இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு மாகாண சட்டசபையில் இன்று இம்ரான்கான் பேசியதாவது:
எங்கள் வசமுள்ள காஷ்மீர் பகுதி மீது ஏதேனும் இந்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டால் பாகிஸ்தான் ராணுவம் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. நாங்கள் எந்த ஒரு அத்துமீறலையும் சகித்து கொள்ள மாட்டோம்.
வெளிநாடுகளில் உள்ள பாகிஸ்தான் தூதர்கள் சர்வதேச அரங்கில் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை எழுப்ப வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளனர். ஒவ்வொரு சர்வதேச அரங்கிலும் ஜம்மு காஷ்மீர் விவகாரம் எழுப்பப்படும்.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்திருக்கிற நடவடிக்கை தொடர்பாக சர்வதேச சமூகம் எதுவுமே எதிர்வினையாற்றாமல் இருப்பது விரக்தியைத் தருகிறது. இந்த பிராந்தியத்தில் போர் ஏற்பட்டால் அதற்கு சர்வதேசம்தான் பொறுப்பு.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஜம்மு காஷ்மீர் குறித்து 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இத்தீர்மானத்தின் மீதான ஐநா சபையின் நிலைப்பாடுதான் என்ன? நாங்கள் நிலைமைகளை மிக உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.
பாகிஸ்தான் மக்களும் ராணுவமும் எதற்கும் தயாராகவே இருக்கிறோம். எந்த ஒரு அத்துமீறலுக்கும் நாங்கள் உடனடியாக பதிலடி தருவோம். 20 ஆண்டுகாலமாக பயங்கரவாதத்துக்கு எதிராக எமது ராணுவம் போராடி வருகிறது. எங்களது சுதந்திரத்தை பாதுகாக்க எங்கள் மக்கள் தயாராக உள்ளனர்.
கோடிக்கான முஸ்லிம் மக்கள், ஐநா சபை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் ஐநா மட்டுமின்றி இதர முஸ்லிம் நாடுகளான சவூதி அரேபியா, எமிரேட் ஆகியவை கூட பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லையே. இவ்வாறு இம்ரான்கான் பேசினார்.