கிரிக்கெட் முதல் பிரதமர் வரை.. 18ம் தேதி பதவியேற்கிறார் "கேப்டன்" இம்ரான் கான்
ஆகஸ்ட் 18ஆம் தேதி பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்கிறார் முன்னாள் கிரிக்கெட்கேப்டன் இம்ரான் கான்.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற ஆட்சியைப் பிடித்துள்ள தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் 18ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார். கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க போகிறார் இம்ரான் கான்.
பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் ஜூலை 26ஆம் தேதி நடைபெற்றது. அதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெஹ்ரிக் இ இன்சாப், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக், மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் மகன் பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவை போட்டியிட்டன.
இதில் தனிப் பெரும் கட்சியாக இம்ரான் கான் கட்சி வெற்றி பெற்றது. தற்போது கூட்டணி அமைத்து ஆட்சியமைக்கிறார் இம்ரான் கான். பிரதமராக அவர் பதவியேற்கவுள்ளார்.
உலகிலேயே ஒரு கிரிக்கெட் வீரர் ஒரு நாட்டின் பிரதமர் ஆகியிருப்பது இதுவே முதல் முறை. பிரதமர் மோடி, இம்ரான் கானுக்கு ஏற்கனவே போன் மூலம் வாழ்த்து கூறியுள்ளார்.
இதுவரை பார்த்த பாகிஸ்தானை முற்றிலும் மாற்றியமைக்கப் போவதாக இம்ரான் கான் கூறியுள்ளார். அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை அறிய இந்தியா மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமும் காத்திருக்கிறது.