70 ஆண்டுகளில் பிற நாட்டின் ஒரு அங்குலத்தை கூட ஆக்கிரமிக்கவே இல்லை.. கூசாமல் பொய்யை அள்ளிவிடும் சீனா
பெய்ஜிங்: பிற நாடுகளுக்கு சொந்தமான நிலப்பரப்பில் ஒரு அங்குலத்தைக் கூட சீனா கடந்த 70 ஆண்டுகளில் ஆக்கிரமித்ததே இல்லை என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங் தெரிவித்துள்ளார்.
Recommended Video
லடாக் எல்லையில் சீனா தொடர்ந்து ஊடுருவல் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சிகளை இந்திய ராணுவ வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்தும் வருகின்றனர்.
கால்வன் பள்ளத்தாக்கை தொடர்ந்து பாங்கோங் ஏரியையும் ஆக்கிரமிக்க சீனா முயற்சிக்கிறது. ஆனால் சீனா வீரர்களை இந்திய ராணுவத்தினர் துரத்தியடித்தனர். எல்லை பிரச்சனை தொடர்பாக இருநாடுகளும் பல்வேறு நிலைகளில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
மின்னல் வேகத்தில்.. சீனாவின் சென்சார், கேமராவில் சிக்காமல்.. லடாக் மலையை பிடித்த இந்திய படை!
அங்குலம் கூட ஆக்கிரமிப்பு இல்லை
இதனிடையே சீனா வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங் (Hua Chunying) கூறியதாவது: கடந்த 70 ஆண்டுகளில் பிற நாடுகளின் ஒரு அங்குலத்தை கூட சீனா இதுவரை ஆக்கிரமித்ததே இல்லை; சீனா போரை தூண்டும் நடவடிக்கைகளிலோ மோதல்களிலோ ஒரு போதும் ஈடுபட்டதும் இல்லை.
ஊடுருவியதும் இல்லை
எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளை சீனா ராணுவத்தினர் மதித்தே நடந்து வருகின்றனர். ஒருபோதும் சீன ராணுவத்தினர் எல்லை தாண்டியதே இல்லை. இருந்தபோதும் சில நேரங்களில் தகவல் தொடர்பில் பிரச்சனைகள் இருந்திருக்கலாம். இருதரப்பும் அமைதியையும் நல்லுறவையும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். எல்லைகளில் அமைதியை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
எல்லையில் ராணுவம் குவிப்பா?
இந்திய எல்லையில் சீனா ராணுவத்தை குவித்து வருவதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிடுகின்றன. இருநாட்டு மக்களும் உண்மைகளை உணர்ந்து அமைதியாக வாழவே விரும்புகின்றனர். இந்திய ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையும் இல்லை.
இருதரப்பு நல்லுறவு, அமைதி முக்கியம்
இந்தியா - சீனா இடையே பல்வேறு நிலைகளிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. எல்லைப் பகுதிகளில் அமைதியை நிலைநாட்டுவதிலும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதிலும் இந்த பேச்சுவார்த்தைகள் ஆக்கப்பூர்வமாக உதவும். இவ்வாறு ஹூவா சுனிங் தெரிவித்துள்ளார்.